வரும் அக்டோபர் முதல் ‘த்ருஷ்யம் 3’ படப்பிடிப்பு தொடங்கப்படுவதாக ஜீத்து ஜோசப் – ஆண்டனி பெரும்பாவூர் – மோகன்லால் கூட்டணி அறிவித்திருந்தது. அதே தினத்தில் அஜய் தேவ்கன் நடிக்கிற ‘த்ரிஷ்யம் 3’ இந்திப் படத்தின் படப்பிடிப்பும் தொடங்கும் என்று அதன் இயக்குனர் அபிஷேக் பதக் கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து மலையாளம், இந்தி மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இந்த கதை ஒரே நேரத்தில் படம்பிடிக்கப்படும் என்ற தகவல் சமூகவலைதளங்களில் பரவத் தொடங்கியது. drishyam 3 release same time in 3 languages
அது பூதாகரமாவதற்குள் ‘நோ’ என்று பதில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஜீத்து ஜோசப்.
’இப்போதான் கதைய எழுத ஆரம்பிச்சிருக்கேன். அதை முடிச்சதும் மத்த மொழியில டைரக்ட் பண்றவங்ககிட்ட கொடுத்துருவேன். அவங்களுக்கு தேவையான மாற்றங்களை அவங்க செஞ்சுக்குவாங்க. ஆனா, ஒரே நேரத்துல மூன்று மொழிகள்லயும் படப்பிடிப்பு நடத்தறது சாத்தியம் இல்ல. மத்தவங்க கால்ஷீட் கொடுக்கற நேரத்துல லாலேட்டன் கிடைப்பாரான்னு தெரியாது.
ஆனா, மூன்று மொழிகள்லயும் இந்த படத்தை ஒரே நேரத்துல ரிலீஸ் பண்ண முடியும். ஏன்னா, ஓடிடியில ஏதாவது ஒரு மொழியில ரிலீஸ் ஆயிடுச்சுன்னா அது மத்த ரீமேக்கை பாதிக்கிற மாதிரி ஆயிடும். இந்தி இயக்குனர் அபிஷேக் பதக், ‘எப்போ ஸ்கிரிப்ட் வொர்க் முடியும்னு கேட்டுக்கிட்டே இருக்கார்’ என்று சொல்லியிருக்கிறார் ஜீத்து ஜோசப்.
மலையாளம், இந்தியோடு தெலுங்கு ‘த்ருஷ்யம்’ ரீமேக்கையும் கணக்கில் எடுத்திருக்கிறார் மனிதர். கன்னட மொழி ரீமேக் பற்றி ஏன் குறிப்பிடவில்லை எனத் தெரியவில்லை. ஒருவேளை அது தாமதமாகத் தயாராகலாம்.
இந்த விஷயத்தில், தமிழ் ரசிகர்கள் தான் ரொம்ப பாவம். ஏற்கனவே ‘பாபநாசம்’ படத்தின் இரண்டாம் பாகம் வரவில்லையே என்று கவலைப்படுபவர்களிடம் ‘மூணாவது பார்ட் ரெடி ஆகிட்டு இருக்கு’ என்றால் வயிறு எரிந்து சாபம் விட்டுவிடுவார்கள்.
அவர்களைச் சாந்தப்படுத்த ‘த்ருஷ்யம் 3’யை தமிழில் ‘டப்’ செய்து வெளியிடுவார்களோ?!