பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ சார்பில் நாட்டிலேயே முதல் முறையாக ரயில் அடிப்படையிலான மொபைல் லாஞ்சர் மூலம் அக்னி பிரைம் ஏவுகணை வெற்றிகரமாக நேற்று (24.09.2025) பரிசோதிக்கப்பட்டுள்ளது.
2000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்ட இந்த நடுத்தர தூர ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே கட்டமைப்புடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ரயில் அடிப்படையிலான மொபைல் லாஞ்சரிலிருந்து மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஏவுகணை செலுத்து பாதை துல்லியமாக கண்காணிக்கப்பட்டது. இந்த வெற்றிகரமான சோதனை, ரயில் அடிப்படையிலான நடைமுறைகளை எதிர்காலத்தில் மேற்கொள்ள உதவும்.
இந்த சோதனை வெற்றியடைந்திருப்பதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட சில நாடுகள் மட்டுமே பெற்றுள்ள இந்த திறனை தற்போது இந்தியாவும் பெற்றுள்ளதாகவும் இந்த பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.