குட்நியூஸ் மக்களே.. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி அதிரடி குறைப்பு – மத்திய அரசு அறிவிப்பு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை (Excise Duty) மத்திய அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது. இது பொதுமக்களுக்குப் பெரும் நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கூடுதல் சிறப்புக் கலால் வரி கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் லிட்டருக்கு ரூ.13 ஆக இருந்த கலால் வரி, தற்போது ரூ.10 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.3 குறைந்துள்ளது.
டீசல் லிட்டருக்கு ரூ.10 ஆக இருந்த கலால் வரி, தற்போது முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலரைத் தாண்டியுள்ளது. ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள்களை கொண்டு செல்லும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. இதன் காரணமாக நாளொன்றுக்கு 2.5 கோடி பீப்பாய்கள் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உலகளாவிய எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனால் கச்சா எண்ணெய் விநியோகத்தில் கடும் பாதிப்பு மற்றும் வரலாறு காணாத விலை உயர் உள்ளிட்ட காரணங்களால், உள்நாட்டில் எரிபொருள் விலை கிடுகிடுவென உயரும் அபாயம் உருவானது.
முன்னதாக, நயாரா எனர்ஜி போன்ற தனியார் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை ரூ.5.30 வரையிலும், டீசல் விலையை ரூ.3 வரையிலும் உயர்த்தின. அதேபோல், பொதுத்துறை நிறுவனங்களும் பிரீமியம் ரக பெட்ரோல் விலையை ரூ.2 வரை உயர்த்தியிருந்தன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பதால், சில்லறை விற்பனை விலை மேலும் உயராமல் தடுக்கும் நோக்கிலேயே மத்திய அரசு இந்த வரிக்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த அதிரடி மாற்றத்தால் போக்குவரத்துச் செலவுகள் கட்டுப்படுத்தப்பட்டு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு தவிர்க்கப்பட வாய்ப்புள்ளது.
