இஸ்ரேல்- அமெரிக்காவின் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் அதி உச்ச தலைவரான கமெனி (காமெனி கமேனி) கொல்லப்பட்டுள்ளதை ஈரான் ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. ஈரானி அதி உயர் தலைவராக திகழ்ந்த கமெனியின் மூதாதையர்கள் வட இந்தியாவுடன் தொடர்புள்ளவர்கள் என்கின்றன ஊடக செய்திகள்.
ஈரானின் மசாத் நகரில் 1939-ம் ஆண்டு ஏப்ரல் 19-ந் தேதி பிறந்தவர் அலி காமெனி. மத நம்பிக்கை கொண்ட குடும்பத்தில் 8 குழந்தைகளில் 2-வதாகப் பிறந்தவர் கமெனி.
அலி கமெனியின் தந்தை ஷியா பிரிவின் மதகுருவாக இருந்தார். 11 வயதிலேயே மதகுருவாகத் தகுதி பெற்ற கமெனி, இளம் வயதிலேயே மதக் கல்வியில் சிறந்து விளங்கினார்.
ஈரானில் முகமது ரிசா ஷா பஹ்லவியின் எதேச்சாதிகார ஆட்சிக்கு எதிராக தீவிரமாகப் போராடினார். இதன் விளைவாக, அவர் 6 முறை கைது செய்யப்பட்டு கொடூரமான சித்திரவதைகளை எதிர்கொண்டார்.
1981 முதல் 1989 வரை ஈரானின் அதிபராகப் பணியாற்றியவர். 1989-ம் ஆண்டு ஈரானின் அதி உச்ச தலைவரானார்.
இந்திய தொடர்பு என்ன?
அயத்துல்லா அலி கமெனியின் மூதாதையர்கள் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் பராபங்கி மாவட்டத்தின் சிரோலி கௌஸ்பூர் தாலுகாவில் உள்ள கிந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன. உ.பி.யில் 1790-ல் பிறந்த ஷியா அறிஞரான சையத் அகமது முசாவி, 1830-ல் ஈராக்கிற்கு புனித யாத்திரை மேற்கொண்டு பின்னர் ஈரானில் குடியேறினார்.
அவரது சந்ததியினரே ஈரானியப் புரட்சியின் தலைவரான அயத்துல்லா ரூஹொல்லா கொமெய்னியும் தற்போதைய உச்ச தலைவர் அலி காமெனியும் என்கின்றனர்.
ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) கமெனியின் நேரடி கட்டளையின் கீழ் செயல்படக் கூடியது. நாட்டின் அணு ஆயுதக் கொள்கைகள் உள்ளிட்ட முக்கிய முடிவுகளில் அவரது பங்கு மிக முக்கியமானது.
தற்போதைய இஸ்ரேல்- அமெரிக்கா கூட்டுத் தாக்குதலில் கமெனி உயிரிழந்துவிட்டதை ஈரான் உறுதிப்படுத்தி உள்ளது. கமெனியின் மறைவுக்கு 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
