மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் யாருமே சஸ்பெண்ட் ஆகலையே என அதிமுக எம்.பி. இன்பதுரை கேள்வி எழுப்பி உள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில், சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து கடந்த 2 நாட்களாக ராகுல் காந்தி பேச முயற்சித்து வருகிறார். ராகுல் காந்தி பேசுவதற்கு மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா மற்றும் பாஜக எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
இதற்கு எதிராக- ராகுல் காந்திக்கு ஆதரவாக ”இந்தியா கூட்டணி” எம்.பி.க்களும் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் “இந்தியா கூட்டணி”யின் 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், சிபிஎம் எம்.பி. சு. வெங்கடேசனும் அடங்குவர்.

இந்த நிலையில் அதிமுக ராஜ்யசபா எம்.பி. இன்பதுரை தமது எக்ஸ் பக்கத்தில், ”நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக சலங்கை கட்டி ஆடுவதில் எப்போதும் திமுக முன்னிலை வகிக்கும்! நேற்று ராகுல் காந்திக்கு ஆதரவாக போர்க்கோலம் பூண்டு நின்று, நம்ம ஊர் சி.பி.எம் சு.வெங்கடேசன் உட்பட இந்தியா கூட்டணியை சேர்ந்த எம்பிக்கள் சஸ்பென்ட் ஆகியுள்ள நிலையில் அந்த லிஸ்டில் ஒரு திமுக எம்பி கூட இல்லையே அது ஏன்?” என கேள்வி எழுப்பி உள்ளார்.
