தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுகவில் போட்டியிட விருப்ப மனு அளித்த 9 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 750 பேரிடம் இன்று (மார்ச் 18) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்துகிறார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலை முன்னிட்டு, திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் நேர்காணல் நடத்தி வருகிறார்.
திமுகவில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் முறைப்படி நேற்று நேர்காணல் தொடங்கியது. இதில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மற்றும் புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி. ஆகியோர் உடனிருந்தனர்.
முதல் நாளில், புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்த முன்னாள் முதல்வர் ஜானகிராமனின் மகன் ஜே.வி.எஸ். ஆறுமுகம் (எ) சரவணன் உள்ளிட்ட 120 பேரிடம் முதல்வர் தொகுதி வாரியாக நேர்காணல் நடத்தி முடித்தார்.
இன்றைய நேர்காணல் விபரங்கள்
இரண்டாவது நாளாக இன்று காலை முதலே நேர்காணல் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மட்டும் 9 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 750 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட உள்ளது.
காலை அமர்வு: தூத்துக்குடி (தெற்கு, வடக்கு), திருநெல்வேலி (கிழக்கு, மத்திய, மேற்கு), தென்காசி (வடக்கு, தெற்கு), மற்றும் கன்னியாகுமரி (கிழக்கு, மேற்கு) ஆகிய மாவட்டங்களுக்கு நேர்காணல் நடைபெற்றது.
பிற்பகல் அமர்வு: மதுரை (வடக்கு, மாநகர், தெற்கு), தேனி (வடக்கு, தெற்கு), விருதுநகர் (வடக்கு, தெற்கு)ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு நேர்காணல் நடைபெற உள்ளது.
இன்றைய நேர்காணலில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தொகுதிகளும் இடம்பெறுகின்றன. இதில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் தொகுதியான போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியும் அடங்கும். அந்தத் தொகுதிக்கு விருப்பமனு அளித்தவர்களிடம் முதல்வர் நேர்காணல் நடத்தும் நிலையில் ஓ.பன்னீர் செல்வத்திடம் முதல்வர் நேர்காணல் நடத்துவார். இந்த நேர்காணல் வரும் 22-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.
