திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மறுமலர்ச்சி திமுக அவசர உயர்நிலைக் குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் தலைமையில் இன்று (மார்ச் 11) காலை நடைபெற்றது.
இதில் கட்சி நிர்வாகிகளுடன் பொதுச் செயலாளர் வைகோ, திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை செய்தார்.
தொடர்ந்து வைகோ, துரை வைகோ ஆகியோர் இன்று மாலை அறிவாலயம் வந்தனர். அதுபோன்று முதல்வர் ஸ்டாலினும் வந்தார்.
இந்நிலையில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கி ஒப்பந்தம் போடப்பட்டது.
அந்த ஒப்பந்ததத்தில், “நடைபெற உள்ள 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோவும் இன்று தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ்நாட்டில் 4 (நான்கு) சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதெனவும், அதில் மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒதுக்கப்படும் சின்னத்திலும் போட்டியிடுவதெனவும் முடிவு செய்யப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அறிவாயலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய வைகோ, “இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
கட்சியின் பதிவை பாதுகாப்பதற்காக ஒரு தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்று கூறிய வைகோவிடம், இதற்காக தொகுதி எண்ணிக்கையில் சமரசம் செய்துகொள்ளப்பட்டதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் எந்த சமரசமும் கிடையாது என தெரிவித்தார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதிமுக 6 தொகுதிகளில் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
