திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளைக் கேட்டு வரும் சிபிஎம் கட்சியின் தலைவர்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று மார்ச் 21-ந் தேதி நேரில் சந்தித்து பேசினார்.
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும் ஒரு தொகுதியில் தனிச் சின்னத்திலும் மதிமுக போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இதேபோல திமுக கூட்டணியில் சிபிஐ கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முன்னதாக காங்கிரஸுக்கு 28, முஸ்லிம் லீக் கட்சிக்கு 2, மமகவுக்கு 2, கொமதேகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சிபிஎம்-க்கு 5 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்துள்ளது. இதனை சிபிஎம் ஏற்க மறுத்து வருகிறது. சிபிஎம்மைப் பொறுத்தவரையில் குறைந்தபட்சம் 6 தொகுதிகளையாவது எதிர்பார்க்கிறது.
இதனால் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை நீடிக்கிறது. இந்நிலையில் சிபிஎம் கட்சியின் அவசர மாநில செயற்குழு மார்ச் 23-ந் தேதி கூடும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் திமுகவின் 5 தொகுதிகளை ஏற்பதா? அல்லது 20 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டு இதர தொகுதிகளில் திமுகவை ஆதரிப்பதா? என்பது குறித்த முக்கிய முடிவை சிபிஎம் எடுக்க இருப்பதாக கூறப்பட்டது.
இந்த பின்னணியில் சிபிஎம் கட்சியின் மாநில அலுவலகத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று திடீரென சென்றார். அங்கு சிபிஎம் அகில இந்திய பொதுச்செயலாளர் பேபி உள்ளிட்ட தலைவர்களுடன் வைகோ ஆலோசனை நடத்தினார். திமுக கூட்டணியில் சுமூகமான தொகுதிப் பங்கீட்டை உருவாக்க வைகோ முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
