இயக்குநர் வேலு பிரபாகரன் தொடர்ந்து உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என அவரது குடும்பத்தினர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. Director Velu Prabhakaran in ICU
தமிழ் சினிமாவின் மூத்த ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர்களில் ஒருவராக அறியப்படுபவர் வேலு பிரபாகரன். 1980ஆம் ஆண்டு வெளியான ‘இவர்கள் வித்தியாசமானவர்கள்’ மூலம் தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆனார்.
அதன்பின்னர் பிரபு நடிப்பில் வெளியான ’நாளைய மனிதன்’ படம் மூலமாக இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். தொடர்ந்து அசுரன், ராஜாளி, கடவுள், சிவன், புரட்சிக்காரன், ஒரு இயக்குநரின் காதல் டைரி என பல படங்களை இயக்கினார். தனது படங்கள் மூலம் நாத்திகம், புரட்சிகர சிந்தனைகளை பேசி அடிக்கடி சர்ச்சையில் சிக்கினார்.
இந்த நிலையில் அவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் தற்போது வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அவர் உயிரிழந்துவிட்டதாக சில ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்த நிலையில், வேலு பிரபாகரன் உடல்நிலை குறித்து வதந்தி பரப்ப வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக அவரது சகோதரர் ராஜ வேலு கூறுகையில், “இயக்குனர் வேலு பிரபாகரன் இன்று காலை முதல் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். அவர் இன்னும் சுவாசித்துக் கொண்டிருக்கும் வேளையில், அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே அவரது உடல்நிலை குறித்த வதந்தி செய்திகளை தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். உறுதிப்படுத்தப்பட்ட தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். அதுவரை, அவர் குணமடைய பிரார்த்தனை செய்வதில் எங்களுடன் இணையுமாறு கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.