டிஜிட்டல் திண்ணை: மீண்டும் அண்ணாமலை? அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

Published On:

| By Minnambalam Desk

AIADMK BJP

வைஃபை ஆன் செய்ததுமே, ‘அதிமுகவுக்கு அதிர்ச்சி வெயிட்டிங்- அண்ணாமலையை களமிறக்கும் பாஜக’ என பரபரப்பான ஹைட் லைனை வாசித்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப். Annamalai’s Return? A Shocking Twist Awaits AIADMK!

தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட பின்னர் கொஞ்சம் அசந்துதான் போனார் அண்ணாமலை. அரசியலில் ஒரு கால் இருந்தாலும் அதற்கு அப்பாலும் சில முயற்சிகளில் தீவிரமாக இருந்தார் அண்ணாமலை.

சர்வதேச அளவில் உடல் வலிமையானவர்களுக்கான Iron Man டைட்டில் வெல்கிற முயற்சிதானாம் அது. Iron Man டைட்டில் வெல்வதற்கு குறிப்பிட்ட நேரத்துக்குள் கடலில் நீந்தி, பின்னர் சைக்கிளிங், ரன்னிங் ஆகியவற்றையும் முடிக்க வேண்டும். இதற்கான பயிற்சிகளில்தான் அண்ணாமலை முழு வீச்சில் ஈடுபட்டு வந்தாராம். ஒவ்வொரு நாளும் 50 கிமீ, 100 கிமீ தொலைவு சைக்கிள் ஓட்டும் பயிற்சியையும் அண்ணாமலை மேற்கொண்டிருந்தாராம்.

இப்படி உடலை அண்ணாமலை வலுப்படுத்திக் கொண்டிருந்த நிலையில் மதுரையில் அமித்ஷா, பாஜகவின் மையக் குழு கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் 2026-ல் தமிழ்நாட்டில் பாஜக- அதிமுக கூட்டணி ஆட்சி அமையும் என்றார் அமித்ஷா. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் அண்ணாமலை மீண்டும் தமது ஆட்டத்தை ஆடத் தொடங்கிவிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு திடீரென அண்ணாமலை ஒரு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில், தமிழகத்தில் 2026-ம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என மதுரையில் அமித்ஷா பேசியதை வரவேற்கிறோம். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு, பாஜக பெற்றுள்ள வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் அதிமுகவுடனான தொகுதிப் பங்கீடு இருக்க வேண்டும். 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 19.4% வாக்குகள் கிடைத்தன; நமது பாஜக கூட்டணிக்கு 11.4% வாக்குகள் கிடைத்துள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஆனால் பாஜக 2-வது இடத்தில் இருந்தது.

அதனால், அதிமுக கூட்டணியில் பாஜகவின் பலத்தின் அடிப்படையில் தொகுதி பங்கீட்டைப் பெற வேண்டும்; அப்படி தொகுதிகளைப் பெற்றால் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி என்பது நிச்சயம் நிறைவேறும்.

அண்ணா திமுக 2 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது எனில் பாஜக 1 சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும்; அதிமுக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையில் சரிபாதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட வேண்டும்; இப்படி தொகுதிகளைப் பெறும் போது 2029-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் 30 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எளிதாக வெல்ல முடியும் என வலியுறுத்தி இருந்தார் அண்ணாமலை.

தமிழ்நாட்டில் பாஜக- அதிமுக கூட்டணி ஆட்சிதான் என அமித்ஷா பேசியது; அதனைத் தொடர்ந்து அண்ணாமலை இப்படி ஒரு கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பியது என அடுத்தடுத்த சம்பவங்களால் அதிமுக தலைமை அதிர்ந்துதான் போனதாம். ஆனாலும் வெளிப்படையாக இதுபற்றிய கருத்துகளைத் தெரிவிக்காமல், பட்டும் படாமல் கவனமாக கடந்து செல்ல வேண்டும் எனவும் அதிமுக தலைவர்களுக்கு அறிவுறுத்தி இருந்தாராம் எடப்பாடி பழனிசாமி.

இந்த நிலையில்தான் நாளை ஜூன் 17-ந் தேதி, அண்ணாமலையை முன்வைத்து அதிமுகவுக்கு அடுத்த அதிர்ச்சி வைத்தியம் காத்திருக்கிறது என்கின்றன பாஜக வட்டாரங்கள்.

அது என்ன அதிமுகவுக்கான அதிர்ச்சி வைத்தியம்?

பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அகில இந்திய அளவிலான முக்கிய ஆலோசனைக் கூட்டம் ஜூன் 17, ஜூன் 18-ல் பெரம்பலூரில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தை முதலில் தஞ்சாவூரில்தான் நடத்த திட்டமிட்டிருந்தனராம். ஆனால் போதுமான பாதுகாப்பு, இடவசதி ஆகியவை அங்கே இல்லையாம்.

இதனையடுத்தே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மிக முக்கியமான இந்த கூட்டம் பெரம்பலூர் ராமகிருஷ்ணா பள்ளியில் நடைபெற உள்ளது. இந்த பள்ளி, பாஜகவின் முக்கிய பிரமுகர் சிவசுப்பிரமணியத்துக்கு சொந்தமானதாம்.

ஆர்.எஸ்.எஸ்.-ன் இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கும் அண்ணாமலை- அதிமுகவுக்கும் என்ன தொடர்பாம்?

பெரம்பலூரில் 2 நாட்கள் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியா முழுவதும் இருந்தும் அதன் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில் இந்த ஆண்டு நடைபெறும் பீகார் சட்டமன்ற தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெறும் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி மற்றும் அஸ்ஸாம் சட்டமன்ற தேர்தல்களை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறதாம்.

இந்த தேர்தல்களுக்கான பொறுப்பாளர்கள், வியூகங்கள் உள்ளிட்டவை குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருக்கிறதாம். பொதுவாக இத்தகைய தேர்தல் வியூகக் கூட்டங்களை ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ரகசியமாகத்தான் நடத்தும்.

பெரம்பலூரில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறதாம்.

பாஜக போட்டியிடும் தொகுதிகள் குறித்து விவாதிப்பதுடன், அண்ணா திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பு அண்ணாமலைக்கு வழங்கப்படுவது குறித்தும் பேசக் கூடும் என்கின்றன பாஜக வட்டாரங்கள்.

தமிழக தேர்தல் தொடர்பான முக்கிய பொறுப்பபை அண்ணாமலையிடம் வழங்குவதற்கு பாஜகவின் அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் ஏற்கனவே ஓகே சொல்லி இருந்தாராம். இந்த நிலையில்தான் பெரம்பலூர் ஆர்.எஸ்.எஸ். ஆலோசனைக் கூட்டத்திலும் இதுபற்றி பேசப்படக் கூடும் என்கின்றன அந்த வட்டாரங்கள்.

ஆர்.எஸ்.எஸ். ஆலோசனைக் கூட்டத்தின் முடிவுகள் உடனே வெளியாகாமல் போனாலும் எப்படியும் அடுத்தடுத்த நாட்கள் வெளியே வந்துவிடும்.

அண்ணாமலையிடம் தொகுதிப் பேச்சுவார்த்தை பொறுப்பு கொடுக்கப்பட்டால் அண்ணா திமுகவால் நிச்சயம் ஏற்க முடியாததாகத்தான் இருக்கும். ஏனெனில் இப்படி தொகுதிப் பங்கீட்டில் அண்ணாமலை சிக்கலை உருவாக்கிவிடுவார் என்பதற்காகவே அவரை தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து மாற்றினால்தான் கூட்டணி என பிடிவாதம் பிடித்தவர் எடப்பாடி பழனிசாமி. இதனாலேயே அண்ணாமலை மாற்றப்பட்டு நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவரான நாளில் அமித்ஷா சென்னை வந்து அதிமுகவுடனான கூட்டணியை உறுதி செய்து அறிவித்தார். இப்போது கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் மீண்டும் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை பொறுப்பாளர் என அண்ணாமலையை பாஜக களமிறக்குவதை அதிமுக எப்படி எதிர்கொள்ளப் போகிறது? என்பதுதான் 2026 தேர்தல் களத்தில் மிக முக்கியமான ட்விஸ்ட்டாக இருக்கும் என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share