தமிழகத்தில் குற்றங்கள் குறைந்திருப்பதாக உள்துறை செயலாளர் தீரஜ் குமார் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொலை, கொள்ளை குற்றங்கள், பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் முக்கிய குற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளன. குறிப்பாக 2021-ல் 1,597 ஆக இருந்த கொலை வழக்குகளின் எண்ணிக்கை, 2024-ல் 1,490 ஆகவும், 2025-ல் 1,461 ஆகவும் குறைந்துள்ளது.
பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளும் குறைந்து வருகின்றன. 2021-ல் 422 ஆக இருந்த இந்த வழக்குகள் 2022-ல் 401 ஆகக் குறைந்துள்ளது.
சட்டம் ஒழுங்கு குறித்து உண்மைக்கு மாறாக சில மாதங்களாக ஒரு சில செய்திகள் வந்துக்கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக விளக்கம் அளிக்கவே இன்று செய்தியாளர்களை சந்திக்கிறோம்” என்றார்.
தொடர்ந்து பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் கூறுகையில், “சிறிய குற்றமாக இருந்தாலும் பெரிய குற்றமாக இருந்தாலும் ஒவ்வொரு குற்றத்தையும் காவல்துறை மிகுந்த தீவிரத்துடன் எடுத்துக் கொண்டு விசாரித்து வருகிறது.
குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் சட்டம் மற்றும் பட்டியலிடப்பட்ட சாதி, பழங்குடியினருக்கான பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க அரசு பல துறைகளுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. பள்ளிக் கல்வித்துறை, சமூக நலத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை உள்ளிட்ட பல துறைகள் இணைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதால் தற்போது மக்கள் தைரியமாக புகார்கள் அளித்து வருகின்றனர்” என்றார்.
தொடர்ந்து பேசிய உள்துறை செயலாளர் தீரஜ் குமார், “அஜித் குமார் கொலை வழக்கில் அரசின் நிலைப்பாடு என்ன? மற்றும் அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? என்பது அனைவருக்கும் தெரியும். சிபிசிஐடி வழக்கை நன்றாக விசாரிக்கும் என்றாலும், சம்மந்தப்பட்டவர்கள் போலீசார் என்பதால், வெளிப்படைத்தன்மை காரணமாக சிபிஐக்கு வழக்கை அரசு மாற்றியது.
மக்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று காவல் நிலையங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறோம்.
கோயில், விழாக்கள், பொது நிகழ்ச்சிகளில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கப்பட்டுள்ளன. நிரந்தர டிஜிபி விவகாரம் குறித்து யுபிஎஸ்சி-க்கு பரிந்துரை பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது” என்று கூறினார்.
