திமுக கூட்டணியில் சிபிஎம் கூடுதல் தொகுதிகளை கேட்பதில் உறுதியாக இருக்கிறது.
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடந்த முறை 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் கந்தர்வ கோட்டை, மதுரை தெற்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
தற்போது, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
கடந்த மார்ச் 17ஆம் தேதி திமுகவுடன் சிபிஎம் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம், ‘அதிக தொகுதிகளில் நிற்க வேண்டும் என்கிற எங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்’ என பேட்டி அளித்தார்.
தொடர்ந்து சிபிஎம் மாநில குழு கூடி ஆலோசித்தது.
இதில் திமுகவிடம் கூடுதல் சீட் கேட்போம். கூடுதல் தொகுதிகள் இல்லை என்றால், கடந்த முறை கொடுத்த 6 தொகுதிகளையாவது கொடுக்க வேண்டும். இல்லையெனில் தேர்ந்தெடுத்து சில தொகுதிகளில் நாம் தனித்து போட்டியிடலாம். மற்ற தொகுதிகளில் பாஜக கூட்டணியை விழ்த்த திமுக அணிக்கு ஆதரவு தெரிவிக்கலாம்” என்று சிலர் யோசனை தெரிவித்திருக்கிறார்கள்.
கடைசியில், திமுகவின் முடிவுக்காக காத்திருப்போம். 6 தொகுதிகளில் இருந்து குறைத்தால் மீண்டும் ஆலோசனை செய்வோம் என்று முடிவெடுத்திருக்கிறார்களாம்.
