தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது என்ன செய்யப் போகிறீர்கள் என்று பாமக தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாசுக்கும் மகனும் அக்கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்த நிலையில் பாமக பெயர் சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்க வேண்டும். பாமக தலைவர் என குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கீடு செய்த கடிதம் தொடர்பான உத்தரவை ரத்து செய்ய வேண்டும். என்னை பாமக தலைவராக அறிவிக்க வேண்டும் என்று கேட்டு ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று அன்புமணி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதோடு கட்சியின் பொதுச் செயலாளரான வடிவேல் ராவணன் தன்னையும் வழக்கில் இணைக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார்.
ஆனால் வடிவேல் ராவணனின் மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் வழக்கில் இணைக்க மறுத்துவிட்டது.
இது தொடர்பாக வடிவேல் ராவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்செல்வி, உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்தும் ராமதாஸ் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இந்த நிலையில் ராமதாஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி தமிழ்செல்வியிடம், தங்கள் தரப்பு கேவியட் மனு தாக்கல் செய்த நிலையில், இப்படி ஒரு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தடை உத்தரவை நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு மீண்டும் இன்று (மார்ச் 16) விசாரணைக்கு வந்த போது, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது என்ன செய்யப் போகிறீர்கள் தந்தை மகன் பிரச்சனை இன்றோ நாளையோ சரியாகலாம். ஆனால் கட்சியை வைத்து தான் வழக்கில் முடிவெடுக்க முடியும் என்று நீதிபதி தமிழ் செல்வி கருத்து தெரிவித்தார்.
மேலும் பாமக பொதுச்செயலாளரான வடிவேல் ராவணனை வழக்கில் இணைத்தால் என்ன பிரச்சனை என்று கேள்வி எழுப்பிய நீதிபதி வழக்கு விசாரணையை மார்ச் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
