இன்று இரவு அல்லது நாளைக்குள் முதல்வர் ஸ்டாலின் எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று முறைப்படி அறிவிப்பார் என திருமாவளவன் கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என ஒதுக்கீடு செய்யப்பட்டாலும் எந்தெந்த தொகுதிகள் என இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்தசூழலில் அண்ணா அறிவாலயத்துக்கு இன்று மாலை சென்ற விசிக தலைவர் திருமாவளவன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவர் கூறுகையில், “திமுக பேச்சுவார்த்தைக் குழுவுடன் நடைபெற்ற இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் போட்டியிடும் 8 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில் நானும், திமுக தரப்பில் டி.ஆர்.பி. ராஜாவும், கையெழுத்திட்டுள்ளோம். எந்தெந்த தொகுதிகள் என்ற விவரத்தை கூட்டணிக் தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் முறைப்படி அறிவிப்பார்.
திருப்திகரமான வகையில் பேச்சுவார்த்தை நடந்தது. விரும்பிய தொகுதிகள் கிடைத்துள்ளன. இன்னும் ஒரு சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
திமுக கூட்டணியில் இழுபறி நிலவுவதாகக் காத்திருப்பவர்கள் ஏமாந்துதான் போவார்கள். 10-க்கும் மேற்பட்ட கட்சிகள் இருக்கும்போது, ஒரு கட்சி கேட்கும் தொகுதியை மற்றொரு கட்சியும் கேட்கும் சூழல் வரும். அதனால் ஏற்படும் காலதாமதத்தை இழுபறி என்று சொல்ல முடியாது. இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் அனைத்து விவரங்களும் வெளியாகும்.
எங்கள் கூட்டணியில் தாமதம் ஏற்பட்டாலே இழுபறி என்று சொல்பவர்கள், அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் சிறிய கட்சிகளுக்குக் கொடுக்கப்படும் நெருக்கடிகளைப் பற்றிப் பேசுவதில்லை என்று கூறினார்.
