ரயிலை கவிழ்க்க சதி… தப்பித்த நீதிபதிகள்!

Published On:

| By Kavi

onspiracy to overturn the Yercaud Express train

தண்டவாளத்தில் இரும்பு துண்டை வைத்து ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளது. இந்த ரயிலில் பயணித்த நீதிபதிகளுக்கு நல்வாய்ப்பாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. Conspiracy to overturn the Yercaud Express train

ஈரோட்டில் இருந்து சேலம், ஜோலார்பேட்டை வழியாக சென்னைக்கு தினசரி ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல் இந்த ரயில் நேற்றிரவு  9 மணியளவில் ஈரோட்டில் இருந்து புறப்பட்டது. 

சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த மாவேலிபாளையத்தை கடந்து மகுடஞ்சாவடி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் இன்ஜின் சக்கரத்தில் பெரிய இரும்பு துண்டு சிக்கியதால் ரயில் தர தரவென சிறிது தூரம் இழுத்துச் சென்றது. இதனால் லோகோ பைலட் ரயிலை உடனடியாக நிறுத்தினார். 

பின்னர் கீழே இறங்கி சென்று பார்த்தபோது தண்டவாளத்தில் பெரிய அளவிலான இரும்பு துண்டு சிக்கியிருப்பது தெரியவந்தது. 

இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே கோட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் சம்பவ இடத்துக்கு வந்தனர்.  சேலம், ஈரோடு ரயில்வே போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.  ரயிலை கவிழ்க்கும் நோக்கில் பெரிய அளவிலான 10 அடி நீளமுள்ள உடைந்த தண்டவாள துண்டை ரயில்தண்டவாளத்தின் குறுக்கே மர்ம நபர்கள் வைத்து சென்றது தெரிய வந்தது. 

இந்த சம்பவத்தால் ரயில் நீண்ட நேரம் நின்றதால் பயணிகள் கீழே இறங்கி நின்றனர்.  இதையடுத்து சேலத்தில் இருந்து மாற்று இன்ஜின் எடுத்து வந்து மாற்றி, ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கினர். இதனால்  2 மணி நேர தாமதமாக 11.45 மணியளவில்  ஏற்காடு எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்னை வந்தடைந்தது. 

இந்த ரயிலில்  நூற்றுக்கணக்கான பயணிகளோடு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளும் பயணித்தனர். 

ஈரோட்டில் உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷின் தந்தையும் மூத்த வழக்கறிஞருமான  வி.கே. முத்துசாமி காலமானார். அவரது உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. 

இந்த இறுதிச் சடங்கில் அமைச்சர்கள் முத்துசாமி, ரகுபதி மற்றும் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், ஜி.கே. இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி மற்றும் முன்னாள் நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், எம்.கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

பின்னர் நேற்றிரவு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை திரும்பினர். ரயில் இன்ஜின் மட்டும் பழுதாகி இழுத்துச் சென்றதால்  யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 

இந்த விபத்துகுறித்து  ரயில்வே டி.எஸ்.பி.பாபு மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Conspiracy to overturn the Yercaud Express train

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share