கூட்டணி விவகாரத்தில் 1996-ம் ஆண்டைப் போல காங்கிரஸ் கட்சி இரண்டாக உடையப் போகிறது என்று பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று பிப்ரவரி 18-ந் தேதி செய்தியாளர்களிடம் கராத்தே தியாகராஜன் கூறியதாவது: நான் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் போது, 1991-ல் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி உடலை சுமந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தேன்.
2008-ல விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனைத் தாக்கிய போது தடுத்து நிறுத்தினேன்.
2014-ல் மாவட்ட தலைவராக இருந்த போத, ஞானதேசிகன் தலைவராக இருந்தார். அப்போதும் சத்தியமூர்த்தி பவனைப் பாதுகாத்தோம்.
இப்படியான எந்த ஒரு நிகழ்விலுமே தொடர்பே இல்லாதவர்தான் இன்றைக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருக்கும் செல்வப்பெருந்தகை.
செல்வப்பெருந்தகை, விடுதலைப் புலி ஆதரவாளர். ராஜீவ் காந்தி இறந்ததைக் கொண்டாடியவர். சத்தியமூர்த்தி பவன் தாக்கப்பட்டபோது காங்கிரஸ் கட்சியில் சாதாரண உறுப்பினர். அப்படியான, விடுதலைப் புலி ஆதரவாளரான செல்வப்பெருந்தகை காங்கிரஸ் தலைவராக இருப்பதை அவரை காங்கிரஸ் நிர்வாகிகள் வெறுக்கின்றனர்.
இன்றைய திமுக- காங்கிரஸ் உறவு விரிசலுக்கு காரணமே இதுதான். செல்வப்பெருந்தகையை காங்கிரஸில் யாரும் தலைவராக ஏற்கவில்லை.
1996-ல் அதிமுகவுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு எடுத்த போது, இன்றைய முதல்வர் ஸ்டாலின் சொல்லி, நாங்கள்தான் நரசிம்ம ராவ் உருவ பொம்மையை எரித்தோம்.
அதே போல, இனி அண்ணன் ஸ்டாலின் உருவபொம்மை காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் எரிக்க போகிறார்கள்.. இது விரைவில் நடக்கப்போகிறது.. காங்கிரஸ் கட்சி இரண்டாக உடையப் போகிறது. காங்கிரஸ்- திமுக; காங்கிரஸ்-விஜய் என மாறப் போகிறது. இவ்வாறு கராத்தே தியாகராஜன் கூறினார்.
