பாமகவில் குழப்பம்- திமுக மீது அன்புமணி ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு

Published On:

| By Minnambalam Desk

Anbumani Ramadoss

பாமகவை பலவீனப்படுத்த சூழ்ச்சிகள் நடக்கின்றன; பாமகவில் நடக்கும் குழப்பங்களுக்கு நானோ ராமதாஸோ காரணம் அல்ல.. திமுகதான் வில்லன் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். Confusion in PMK – Anbumani Ramadoss Levels Open Allegations Against DMK!

காஞ்சிபுரம் மாவட்ட பாமக பொதுக் குழுக் கூட்டத்தில் இன்று ஜூன் 16-ந் தேதி அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: பாமகவை பலவீனப்படுத்த சூழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. பாமகவில் நடக்கிற குழப்பத்துக்கு அய்யாவோ (ராமதாஸ்), நானோ காரணம் அல்ல.. திமுகதான் வில்லன். நம்ம பாமகவிலும் சில சூழ்ச்சியாளர்கள் இருக்கின்றனர். அந்த சூழ்ச்சியாளர்கள் யார்? யார்? என்பது இன்னும் கொஞ்ச நாளில் தெரியப் போகிறது.. அதை நான் சொல்ல வேண்டியதும் இல்லை. அந்த சூழ்ச்சியாளர்கள் மூலமாக குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர்.

கட்சிகளை உடைக்க திமுக முயற்சி

பாமகவை திமுகவால் நேரடியாக களத்தில் சந்திக்க முடியாது.அந்த தைரியம் திமுகவுக்கு இல்லை. அடுத்த ஆண்டு தேர்தலில் எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என நினைக்கிறது திமுக. இதனால் எதிரே உள்ள கட்சிகளை உடைக்க முயற்சிக்கிறது. இது வெற்றி பெறாது.

துரோகம் செய்கிற நாளே வாழ்நாளின் கடைசிநாள்

என் மேல் விமர்சனம் வைக்கிறார்கள். நான் என்னமோ காசு வாங்கிட்டேன்.. அதை வாங்கிட்டேன் என்கிறார்கள். என் கட்சிக்கும் என் சமுதாயத்துக்கும் (வன்னியர்களுக்கும்) நான் துரோகம் செய்தால் அதுதான் என் வாழ்க்கையின் கடைசி நாள். என் கட்சிக்கும் என் சமூகத்துக்கும் நான் என்றைக்குமே துரோகம் செய்ய மாட்டேன்; துரோகம் செய்யவும் முடியாது.

ராமதாஸை குழப்பும் சூழ்ச்சியாளர்கள்

ஆனால் நம் கட்சியில் உள்ள சூழ்ச்சியாளர்கள்.. அவர்களை துரோகி என்று சொல்லமாட்டேன்.. இன்னும் அந்த அளவுக்கு அவர்கள் போகவில்லை.. அய்யாவிடம் அப்படி இப்படி என சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அய்யாவுக்கும் அவங்களைப் பற்றி தெரியலை.

என்னிடம் நேரில் சொல்லலாமே

அய்யா என் மீது கோபம் இருந்தால் மன்னித்துவிடுங்கள் என்று நேற்று கூட சொன்னேன். எங்க அப்பாகிட்ட மன்னிப்பு கேட்டேன். தப்பு கிடையாது.. தொலைக்காட்சிகளில் அய்யாதானே, நான் அப்படி செய்துவிட்டேன்.. இப்படி செய்துவிட்டேன்.. தூக்கம் வரவில்லை என்றார். இதனை நேரில் என்னிடம் சொல்லிவிட்டுப் போகலாம்.

தப்பே செய்யலையே.. மன்னிப்பும் கேட்டேன்

நான் எந்த தப்புமே பண்ணலை.. ஆனாலும் நான் மன்னிப்பு கேட்டிருக்கிறேன். என் நோக்கம் இந்த சமூகத்தை இந்த கட்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக வேண்டும் என்பதுதான். எனக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் இருக்கிறது. என் பின்னால் கோடிக்கணக்கான தம்பி தங்கைகள் இருக்கின்றனர். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share