கோவையில் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு சி.சுப்பிரமணியம் மேம்பாலம் என பெயரிடப்பட்டுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் பொள்ளாச்சி, பாலக்காடு சாலைகளுக்கு விரைவாகச் செல்லவும் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் வரை 3.8 கி.மீ நீளத்திற்கு சுமார் ரூ. 481.95 கோடி மதிப்பீட்டில் உயர் மட்ட மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகஸ்ட் 2024-ல் திறந்து வைத்தார். இந்நிலையில் இன்று (டிசம்பர் 28) அந்த பாலத்திற்கு சி.சுப்பிரமணியம் மேம்பாலம் என பெயர்சூட்டுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கொள்கைகளும் பாதைகளும் வெவ்வேறானாலும் மக்களின் நன்மதிப்பைப் பெற்று நாட்டுக்காகப் பணியாற்றிய தலைவர்களைப் போற்றுவதே மாண்பு!
ஒன்றிய அமைச்சராகப் பொறுப்பு வகித்து, நாட்டு மக்களின் பசிப்பிணியைப் போக்கிய பசுமைப் புரட்சிக்கு அடித்தளமாக இருந்தவர் மதிப்பிற்குரிய பாரத ரத்னா சி.சுப்பிரமணியம் அவர்கள்.
அவரது புகழொளியைப் பரப்பிட வேண்டும் என மதிப்பிற்குரிய டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் அவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, கோவை மாநகரின் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு ‘சி. சுப்பிரமணியம் மேம்பாலம்’ என்று பெயர்சூட்டும் மகிழ்ச்சிகரமான அறிவிப்பை உங்கள் எல்லோருடனும் பகிர்ந்துகொள்கிறேன்.”இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
