தமிழகத்தில் போதைப்பொருள் வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. Cocaine Actor Krishnan Kevin
கடந்த 22ஆம் தேதி நுங்கம்பாக்கத்தில் உள்ள “லார்ட் ஆப் தி டிரிங்க்” பாரில் நடந்த தகராறைத் தொடர்ந்து, போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் அதிமுக ஆதரவாளரான பிரசாத் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த பிரதீப் குமார் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நைஜீரியாவை சேர்ந்த ஜீரிக் மற்றும் பெங்களூருவில் இருக்கும் கானா நாட்டை சேர்ந்த ஜான் ஆகியோர் கொக்கைன் சப்ளை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து ஒசூரில் வைத்து ஜானை தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஜான் யாருக்கெல்லாம் கொக்கை சப்ளை செய்திருக்கிறார் என்று பிரதீப் குமாரிடம் கேட்டபோதுதான், ஸ்ரீகாந்தை ஜானுடன் பார்த்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
தொடர்ந்து ஸ்ரீகாந்துக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு வரவழைத்த நுங்கம்பாக்கம் போலீசார் அவருக்கு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.
இதில் அவர் கொக்கை பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டது. நட்சத்திர விடுதிகளில் நடக்கும் கேளிக்கை விருந்துகளில் ஸ்ரீகாந்த் தொடர்ச்சியாக போதைப்பொருள் பயன்படுத்தி வந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஸ்ரீகாந்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் நடிகர் கிருஷ்ணாவும் சிக்கினார்.
கேரளாவில் படப்பிடிப்பில் கிருஷ்ணா இருந்ததாக சொல்லப்பட்ட நிலையில், அவரை கைது செய்து சென்னை அழைத்து வர தனிப்படை போலீசார் கேரளா விரைந்தனர்.
ஆனால் தானே விசாரணைக்கு வருவதாக போலீசாருக்கு கிருஷ்ணா தகவல் தெரிவித்திருக்கிறார். அதன்படி நேற்று விசாரணைக்கு வந்த கிருஷ்ணாவை ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் வைத்து போலீசார் 14 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை கொண்டனர்.
இறுதியில் கிருஷ்ணாவையும் போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணாவை தொடர்ந்து கொக்கைன் சப்ளை செய்து வந்த ஜெஸ்வீர் (எ) கெவின் இன்று (ஜூன் 26) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கொக்கைன் 1/2 கிராம், மெத்தபெட்டமைன் -10.30 கிராம், எம்.டி.எம்.ஏ 02.75 கிராம், ஓஜி கஞ்சா 2.40 கிராம், கஞ்சா 30 கிராம், ஓ.சி பேப்பர் 40 கிராம், ஜிப்லாக் கவர்-40 கிராம், எடை இயந்திரம் சிறியது -2, மடிக்கணினி-1, செல்போன்-1 உள்ளிட்ட பொருட்களும், ரூ.45.200 ரொக்கமும் பறிமுதல் செய்தனர்.
இவர்களுடைய வங்கி பணப்பரிவர்த்தனை மற்றும் இதுவரை கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள், விசாரணை சாட்சியங்கள், தொழில் நுட்ப ஆதாரங்கள் அடிப்படையில் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது தொடர்பாக போலீசார் வெளியிட்ட அறிக்கையில், “ ஸ்ரீகிருஷ்ணா, கெவினிடமிருந்து போதைப்பொருளை வாங்கி உட்கொள்ளும் பழக்கம் உடையவர். அதை அவர் நண்பர்களுடன் இணைந்து, பகிர்ந்து உட்கொள்ளும் பழக்கம் உள்ளவராக இருக்கிறார். மேலும் போதைப்பொருள் உட்கொள்பவருடன் வாட்ஸ்அப் குழுக்களில் இணைந்து அது சம்மந்தமாக கருத்து பரிமாற்றங்களில், போதைப்பொருள் உட்கொள்ளும் இடம் மற்றும் நேரம் ஆகியவற்றை பகிர்ந்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, “போலீஸ் தன்னை தேடுகிறது என்பதை அறிந்த கிருஷ்ணா, தனது செல்போனில் இருந்த வாட்ஸ் அப் குரூப்களில் இருந்து வெளியேறியுள்ளார். அந்த குரூப் ‘பப்’ நண்பர்கள் குழுக்களாக இருந்துள்ளது. முக்கிய தொலைபேசி எண்களையும், வாட்ஸ் அப் ஆடியோக்கள், வீடியோக்களையும் டெலிட் செய்துள்ளார். தற்போது அதையெல்லாம் ரெக்கவர் செய்ய தொழில்நுட்ப பிரிவிடம் கிருஷ்ணா மொபலை கொடுத்துள்ளோம்.
இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வளசரவாக்கத்தில் வசித்து வந்த கெவினிடம் இருந்துதான் கொக்கைன் வாங்கியதாக தெரிவித்தார். இதையடுத்து கெவினை கைது செய்தோம்.
இந்நிலையில் கெவின், கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலத்தின்படி, முக்கிய பிரபலங்களின் வாரிசுகள் பட்டியல்கள் நீளமாக செல்கிறது.
எனவே, அவர்களில் முக்கியமானவர்களை விசாரணைக்கு அழைத்து கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றனர்.
இதனால் சினிவட்டாரத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். Cocaine Actor Krishnan Kevin