பரபரப்பான தேர்தல் சமயத்தில் முதல்வர் ஸ்டாலின் , இன்ஸ்டா பிரபலங்களான தேவா, ஜீவா சிறுவர்களுடன் சேர்ந்து ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சாத்திப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தேவா, ஜீவா. இவர்கள் கல்வியை முன்வைத்து சுட்டித்தனமாக ரீல்ஸ் வெளியிட்டு வருகின்றனர். இவர்கள் படிப்பிலும் சுட்டி.
இந்தநிலையில் தேவாவையும், ஜீவாவையும் முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 14) நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
ஜீவாவிடமும், தேவாவிடமும் அவர்களது குடும்பத்தை பற்றி விசாரித்த முதல்வர் ஸ்டாலின் எத்தனை நாட்களாக ரீல்ஸ் எடுக்கிறீர்கள் என்று கேட்க… சிறுவர்கள், ‘நாங்கள் துருதுருவென இருப்போம். அதை வீடியோவும் எடுப்போம். எங்களது மாமா அந்த வீடியோவை முதலில் இணையத்தில் பதிவேற்றினார். அதில் ரீச் இல்லை. பின்னர் ஒரு ரீல்ஸ் போட்டோம்… அது ரீச் ஆகிவிட்டது சார்’ என மழலை குரலில் பதிலளித்தனர்.
உங்களை ஊக்கப்படுத்தவே இங்கு அழைத்தேன் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின் காலை உணவு திட்டம் குறித்து விசாரித்தார். பின்னர் மாணவர்களின் அம்மா, அப்பாவையும் அழைத்து பேசினார்.
தொடர்ந்து சிறுவர்கள், சார் உங்க நாய்குட்டி பற்றி சொல்லுங்க.. என கேட்க… முதல்வர் ஸ்டாலின், ‘அது பேர் சிட்டு… நான் இருந்தால் தான் தூங்கும். நான் இல்லையென்றால் தூங்காது. நீங்கள் நாய் வளர்க்கிறீர்களா?” என குழந்தைகளோடு அன்பாக பேசினார்.
தொடர்ந்து அவர்களோடு ரீல்ஸ் எடுத்தார் முதல்வர் ஸ்டாலின்.
சிறுவர்கள்… “ஹாய் கைஸ், இப்போது நம்ம கூட யார் இருக்காருன்னா முதல்வர் சார் இருக்காரு. முதல்வர் சார் சொன்னா இன்னும் நிறைய பேருக்குப் புரியும்னு நினைக்கிறேன், அதனால முதல்வர் சாரையே பேசச் சொல்றேன். சார், உங்களுக்குத் தெரிஞ்ச ஏதாவது அட்வைஸ் அல்லது மோட்டிவேஷன் சொல்லுங்க சார்.”
முதல்வர்… “அட்வைஸ் சொல்லணுமா? சரி… ரீல்ஸ் எல்லாம் நல்லா போடுறீங்க தம்பி, அதுக்கு என்னுடைய வாழ்த்துகள்! ஆனா, இதையே வேலையா வச்சிக்காம படிப்பிலும் கவனத்தைச் செலுத்தணும். நல்லா படிச்சு நீங்க சொன்ன மாதிரி கலெக்டர், போலீஸ் ஆபீசர் ஆகணும்னா கண்டிப்பா நல்லா படிக்கணும். உங்க கனவு நிறைவேற என்னுடைய வாழ்த்துகள்!”
தற்போது இந்த ரீல்ஸ் இணையத்தில் வைரலாகியுள்ளது.
