நீரில் மூழ்கி உயிரிழந்த இரண்டு மாணவிகள்: முதலமைச்சர் நிதி அறிவிப்பு

Published On:

| By Monisha

நாமக்கல் மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த இரண்டு மாணவிகளின் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்குவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் அத்திப்பலகானூர் பகுதியைச் சேர்ந்த ஜனனி மற்றும் ரட்சணாஸ்ரீ ஆகிய இரு மாணவிகள் ராசிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு படித்து வந்தனர்.

இன்று (செப்டம்பர் 10) சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் வீட்டிற்குத் தெரியாமல் அருகே உள்ள குட்டையில் மாணவிகள் இருவரும் குளிக்கச் சென்றனர்.

அப்போது எதிர்பாராத விதமாகச் சேற்றில் சிக்கி வெளிவர முடியாமல் உயிரிழந்தனர்.

அப்போது, குட்டை அருகே நாய் ஒன்று குறைத்துக் கொண்டிருந்ததையும், கரையின் மீது துப்பட்டா இருந்ததையும் கவனித்த அப்பகுதி மக்கள் சந்தேகம் ஏற்பட்டு குட்டையில் இறங்கி பார்த்துள்ளனர்.

அப்போதுதான் குட்டையில் இரண்டு . மாணவிகள் இறந்த கிடந்தது தெரியவந்தது. மாணவிகளின் சடலத்தை மீட்டு ராசிபுரம் காவல் துறையினர் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாணவிகளின் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இந்த நிதியானது முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படவுள்ளது. உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்துக்குத் தனது இரங்கலையும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மோனிஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share