ராஜ திருமகன்
ஒரு கிறித்தவ தம்பதிக்கு (கிச்சா ரவி- ஹரிதா) மகனாகப் பிறந்த ஆண்டனி (பூவையார்). இஸ்லாமியர் ஒருவரின் (தலைவாசல் விஜய்) தாயில்லா இரண்டு மகன்களில் இளைய மகன் அப்துல்லா(அர்ஜுன்), ஒரு இந்து பிராமண தம்பதிக்கு(ஜாவா சுந்தரேசன்- வினோதினி வைத்தியநாதன்) மகனாகப் பிறந்த ராம் (அஜய் அர்னால்) என்ற சிறுவன் ஆகியோர் பள்ளிக்கூட வயதிலேயே போதைப் பொருட்கள் பயன்படுத்துகிறார்கள்.
வெட்டிப் புதைக்கிறார்கள் . பாட்டில்களை உடைத்து மாஞ்சா செய்கிறார்கள்.
தன் மருமகனையே அழிக்கத் துடிக்கும் அரசியல்வாதி ஒருவரின் (வேல ராமமூர்த்தி) பேரனைக் கடத்துகிறார்கள்.
ரவுடியாக இருந்து மேற்படி அரசியல்வாதியால் போலீசாக மாறிய இன்ஸ்பெக்டர் (சாய்தீனா) ஒருவரை, பேரனைக் கண்டு பிடிக்க நியமிக்கிறார் அரசியல்வாதி
இதற்கிடையில் பேரன் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டு சாக்கு மூட்டையில் பிணமாக இருக்கிறான் என்பதைப் போலீஸ் கண்டு பிடிக்கிறது
சாக்கு ‘இந்து’ ராமின் வீட்டில் இருந்து போனது தெரிகிறது.
மூன்று சிறுவர்களும் கைது செய்யப்படுகிறார்கள் .
அவர்களை கண்டந்துண்டமாக வெட்டிக் கொல்ல இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிடுகிறார் அரசியல்வாதி . சீர்திருத்தப் பள்ளியில் ரவுடி சிறுமிகள், சிறுவர்களை மூவரும் ஓடவிட்டு உதைக்கிறார்கள் .

ராம் மட்டும் குற்றத்தை நேரடியாக செய்யவில்லை என்று முடிவாகி விடுதலை செய்யப்படுகிறான் . மாவட்ட அளவில் நடந்த திருக்குறள் போட்டியில் 1330 குறள்களையும் தலைகீழாக சொல்லி முதல் பரிசு பெறுகிறான் ராம்.. அவனை மேற்கொண்டு தன் பள்ளியில் படிக்க வைக்க விரும்பும் தனியார் பள்ளி தாளாளர் ஒருவர், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறார்.
அவரிடம் ”தான் போட்டியில் வென்றதற்காக பரிசு பெறும் விழாவுக்கு சிறையில் இருக்கும் நண்பர்களையும் நீங்கள் வர வைத்தால் நான் உங்கள் பள்ளியில் சேர்கிறேன்” என்கிறான்.
தனியார் பள்ளித் தாளாளர் அவரது பண பலத்தை வைத்து குற்றவாளியாக இருக்கும் அப்துல் ஆண்டனி இருவரையும் விழாவுக்கு வர வைக்க,
அங்கே கலெக்டரிடம் ராமும் அப்துல்லாவும் ஆண்டனியும் சொல்லும் விஷயங்கள் தலைகீஷ் ரகம்.
நடந்தது என்ன ? குடிகார அப்பனிடம் இருந்து நோயாளி அம்மாவைக் காப்பாற்றும் ஆண்டனி . சிறுவயது முதலே திருக்குறள் மீது காதல் கொண்ட ராம், அப்பாவுக்கு எப்போதும் உதவும் அப்துல்லா, ஆகியோர் ஏன் இப்படி மாறினார்கள்? நடந்தது என்ன என்பதே…,
அன்னை வேளாங்கண்ணி ஸ்டுடியோஸ் கிளமெண்ட் சுரேஷ் தயாரிக்க, ஜெயவேல் எழுதி இயக்கி இருக்கும் படம்.
சுமாரான படமாக்கல் இயல்பான காட்சிகளைக் கொண்டு போகிறது படம் .
சிறுவர்கள் ஆரம்பக் காட்சிகளில் செய்யும் காட்சிகள் பகீர் .
அப்துல்லாவின் பெரிய மகன் கத்தியில் கயிறு சுற்றத் தெரியாமல் முழிக்க , இளைய மகன் அப்துல்லா சர்வ சாதரணமாக கத்தியைக் கையாண்டு கயிறு சுற்றுவதைப் பார்த்து அப்துல்லா ஷாக் ஆவது நல்ல விஷயம் . லாக்கப் ரூமில் உய்கார்ந்து கொண்டு இன்ஸ்பெக்டர் வேலைகளைப் பார்க்கும் கேரக்டரில் சாய் தீனா கவனிக்க வைக்கிறார் .
ஆண்டனி அம்மாவின் பிளாஷ்பேக் நெகிழ்ச்சி . கிளைமாக்ஸ் உருக்கம்.

இந்து பையன் என்றால் பிராமணப் பையன் என்றுதான் காட்ட வேண்டுமா? அவர்கள் திருக்குறளை அப்படி நேசிக்கிறார்களா? பிராமணர் அல்லாத இந்து சிறுவர்களைக் காட்டக் கூடாதா? எனில் நாங்கள் மட்டுமே இந்து மதத்தின் பிரதிநிதி என்று பிராமணீயம் சொல்வதை இந்தப் படத்தின் இயக்குனர் ஏற்கிறாரா?
சிறுவர்கள் ஏன் இப்படி நடந்து கொண்டார்கள் எனும் காரணம் ஓகேதான் .சிறுவர்கள் நல்லவர்கள் ஒரு நல்ல நோக்கத்துக்குத்தான் அப்படி செய்கிறார்கள் எனில் அதற்குப் பொருத்தமாக அவர்கள் ஆரம்பத்தில் செய்யும் காட்சிகள் இருக்க வேண்டும் .
சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் எம் ஜி ஆரைத் திருடனாகக் காட்டுவதற்கும் நம்பியாரை திருடனாகக் காட்டுவதற்கும் உள்ள வித்தியாசம் . ஆனால் இதில் சிறுவர்களை நம்பியார் போன்ற திருடனாகக் காட்டி விட்டு கடைசியில் அவர்கள் எம்ஜிஆர் மாதிரி என்கிறார்கள்
இந்தப் பசங்கதான் இப்படி கஞ்சா அடிக்கிறார்கள் என்றால், அப்துல்லாவின் அண்ணன் கேரக்டரையும் அப்படியே காட்டுகிறார்கள்.
இப்படி ஒரு கதைக்கு ஏற்ற மேக்கிங் இல்லை. சாதாரணமாக காட்சிகள் நகர்கிறது .
கேரக்டர் வடிவமைப்பில் கவனம் செலுத்தி இன்னும் சிறப்பான வசனங்கள் நல்ல படமாக்கல் எல்லாம் இருந்து இருந்தால்இது சங்கர் சலீம் சைமன் படத்தை விட சிறப்பாக இருந்திருக்கும் .
புகைப் பழக்கத்துக்கு எதிரான இந்தப் படத்தை இவ்வளவு புகைக்கும் காட்சிகளோடு சொல்லாமல் – அதாவது புகை போட்டுப் பழுக்க வைக்காமல் இயல்பாகப் பழுக்க வைத்து இருக்கலாம்.
