தமிழகத்தில் போகி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. நாளை சூரியன் பொங்கல் கொண்டாடப்படவுள்ளது.
இந்தநிலையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் அரசு ஊழியர்களுடன் இன்று (ஜனவரி 14) பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “தமிழ்நாடு முழுவதும் நாம் சமத்துவப் பொங்கலை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். “எல்லார்க்கும் எல்லாம்” என்ற இலக்கை நோக்கி, சமத்துவ நிலையை அனைவரும் அடைந்திடும் நோக்கத்தோடு, நம்முடைய திராவிட மாடல் அரசு பணியாற்றிக் கொண்டிருக்கிறது;
இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், உழைத்துக் கொண்டிருக்கிறது. உழைத்துக் கொண்டிருப்பவர்கள் என்று சொன்னால், நாங்கள் மட்டுமல்ல, நீங்களும் சேர்ந்துதான் உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
தமிழ்நாட்டு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தலைமைச் செயலகத்தில் நீங்கள் எல்லோரும் நேரம், காலம் பார்க்காமல், உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்படிப்பட்ட உங்களோடு, இந்த பொங்கலை கொண்டாடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த மகிழ்ச்சி, உங்கள் உள்ளங்களிலும், உங்களுடைய இல்லங்களிலும், பொங்கட்டும்! பொங்கட்டும்! என்று பொங்கல் வாழ்த்து கூறினார்.
