சென்னையில் புறநகர் ரயில்கள் குறைக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதால், மாணவர்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ரயிலில் ஏற முடியாமல் அவதியுறுகின்றனர். கடும் கூட்ட நெரிசல் காரணமாக மூச்சுவிட கூட முடியாத நிலை உருவாகியுள்ளது. இதற்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மநீம வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை மாநகரின் லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் தங்களது அன்றாட போக்குவரத்துக்கு நம்பியிருந்த புறநகர் ரெயில்கள் முன்னறிவிப்போ, தகுந்த முன்னேற்பாடோ இன்றி ரத்து செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தொழிலாளர்கள், வியாபாரிகள், வேலைக்குச் செல்பவர்கள், மாணவர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் மணிக்கணக்கில் ரெயில்களுக்காகக் காத்திருக்கிறார்கள். முதியவர்கள், பெண்கள், குழந்தைகளால் ரெயிலில் ஏறமுடியவில்லை. கடும் கூட்ட நெரிசல் காரணமாக மூச்சுவிடக் கூட முடியாமல் தவிக்கின்றனர்.
இதனால் பொதுமக்கள் கடுமையான வேதனைக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். பொதுத் தேர்வுகள் நெருங்கும் வேளையில் நமது மாணவர்களுக்கு இப்படியொரு சித்ரவதை கடுமையான உளநெருக்கடியை உண்டாக்குகிறது.
தென்னக ரெயில்வே உடனடியாக செயல்பட்டு மக்களின் இன்னல்களைத் துடைக்க முன் வரவேண்டும். போர்க்கால அடிப்படையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்” என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது.
