சென்னை மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகும் தருணம் வந்துவிட்டது. போக்குவரத்து நெரிசலுக்குப் பெயர்போன ஆற்காடு சாலையில் (Arcot Road), இனி மெட்ரோ ரயில்கள் சீறிப் பாய உள்ளன. சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகளின் (Phase 2) மிக முக்கியப் பகுதியான போரூர் முதல் வடபழனி வரையிலான வழித்தடத்தில், ஜனவரி 11 வெற்றிகரமாகச் சோதனை ஓட்டம் (Trial Run) நடத்தப்பட்டது.
வெற்றிகரமான சோதனை ஓட்டம்: நேற்று காலை 11:15 மணியளவில் போரூர் சந்திப்பில் இருந்து புறப்பட்ட மெட்ரோ ரயில், சுமார் 5.5 கி.மீ தூரத்தைக் கடந்து 12:10 மணியளவில் வடபழனியை அடைந்தது. மணிக்கு 15 கி.மீ என்ற மிதமான வேகத்தில் இயக்கப்பட்ட இந்த ரயில், தண்டவாளங்களின் உறுதித்தன்மை மற்றும் மின்சார இணைப்புகளைச் சோதித்தது.
எப்போது திறப்பு? இது சென்னை மக்களுக்கு, குறிப்பாகப் போரூர், வளசரவாக்கம் பகுதி மக்களுக்கு ஒரு ஜாக்பாட் செய்தி. இந்த வழித்தடத்தில் பிப்ரவரி மாதம் (அடுத்த மாதம்) முதல் பயணிகள் சேவை தொடங்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை திட்டமிடப்பட்ட சேவை, இப்போது வடபழனி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த வழித்தடத்தின் சிறப்பம்சங்கள் (Double Decker Miracle): இந்தத் திட்டத்தின் மிக முக்கிய அம்சம், ஆழ்வார்திருநகர் முதல் ஆலப்பாக்கம் வரையிலான 4 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள “இரட்டை அடுக்கு” (Double Decker) பாலம் ஆகும். அதாவது, ஒரே தூணில் இரண்டு அடுக்குகளாக மெட்ரோ ரயில்கள் செல்லும்.
- கீழ் அடுக்கு (Corridor 4): கலங்கரை விளக்கம் (Lighthouse) – பூந்தமல்லி பைபாஸ்.
- மேல் அடுக்கு (Corridor 5): மாதவரம் – சோழிங்கநல்லூர். தற்போது திறக்கப்படவுள்ளது கீழ் அடுக்கான ‘காரிடார் 4’ ஆகும்.
வடபழனி – ஒரு மெகா ஜங்ஷன்: இந்தத் திறப்பு ஏன் முக்கியமானது என்றால், வடபழனி மெட்ரோ நிலையம் இனி ஒரு மிகப்பெரிய இணைப்பு மையமாக (Interchange Hub) மாறவுள்ளது.
- போரூரில் இருந்து வரும் பயணிகள், வடபழனியில் இறங்கி, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள முதல் கட்ட மெட்ரோ (பச்சை வழித்தடம் – Green Line) ரயிலுக்கு மாறலாம்.
- இதன் மூலம் சென்ட்ரல், விமான நிலையம், விம்கோ நகர், கிண்டி போன்ற இடங்களுக்கு மிக எளிதாகச் செல்ல முடியும். இதற்காக இரு நிலையங்களையும் இணைக்க ஒரு இணைப்புப் பாலம் (Link Bridge) கட்டப்பட்டுள்ளது.
நிலையங்கள் என்னென்ன? பூந்தமல்லியில் இருந்து வரும் இந்த ரயில், போரூர் ஜங்ஷன், ஆழ்வார்திருநகர், வளசரவாக்கம், காரம்பாக்கம், ஆலப்பாக்கம் வழியாக வடபழனியை அடையும். ஆனால், ஜூன் 2026 வரை இடைப்பட்ட நிலையங்களில் ரயில் நிற்காது; போரூருக்கு அடுத்து நேரடியாக வடபழனியில் தான் நிற்கும் என்றும் கூறப்படுகிறது.
தினசரி ஆற்காடு சாலையில் மணிக்கணக்கில் டிராஃபிக்கில் சிக்கித்தவிக்கும் ஐடி ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இன்னும் சில வாரங்களில் விடிவுகாலம் பிறக்கப்போகிறது!
