“எச்.ஆர் (HR) வேலைன்னாலே அட்டெண்டன்ஸ் போடுறது, சம்பளம் கால்குலேட் பண்றது மட்டும்தானே?” என்று நினைத்துக் கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது.
இன்றைக்கு அனைத்துத் துறைகளிலும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் (AI) புகுந்து விளையாடுவது போல, மனிதவளத் துறையிலும் (Human Resources) தொழில்நுட்பம் முக்கிய இடம்பிடித்துள்ளது.
இதை மனதில் வைத்து, எச்.ஆர் துறையில் சாதிக்க நினைப்பவர்களுக்காகவே சென்னை ஐஐடி-யின் ‘பிரவர்தக்’ (IITM Pravartak) அமைப்பும், மத்திய கல்வி அமைச்சகத்தின் ‘ஸ்வயம் பிளஸ்’ (Swayam Plus) திட்டமும் இணைந்து ஒரு புதிய படிப்பை அறிமுகம் செய்துள்ளன.
என்ன படிப்பு?
இதன் பெயர் ‘AI-Enabled HR Analytics’.
அதாவது, மனிதவளத் துறையில் செயற்கை நுண்ணறிவை (AI) எப்படிப் பயன்படுத்துவது? டேட்டா அனலிட்டிக்ஸ் மூலம் எப்படிச் சரியான முடிவுகளை எடுப்பது? என்பதைச் சொல்லிக்கொடுக்கும் 12 வாரப் பயிற்சி வகுப்பு இது.
என்ன சொல்லித்தருவாங்க?
வெறும் தியரி கிளாஸ் மட்டுமல்ல; முழுக்க முழுக்க பிராக்டிகல்!
- பைத்தான் (Python) புரோகிராமிங்.
- பவர் பிஐ (Power BI) மூலம் டேட்டாவை அலசுவது.
- புள்ளியியல் (Statistics) மற்றும் கணித முறைகள்.
- மெஷின் லேர்னிங் (Machine Learning) அடிப்படைகள்.
இவை அனைத்தையும் எச்.ஆர் துறைக்கு ஏற்றவாறு எப்படிக் கையாள்வது என்று நிபுணர்கள் கற்றுத் தருவார்கள்.
யாருக்கெல்லாம் இது பயன்படும்?
- தற்போது எச்.ஆர் துறையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் (தங்களை ‘அப்டேட்’ செய்து கொள்ள).
- இறுதியாண்டு படிக்கும் எம்பிஏ (MBA) மற்றும் கல்லூரி மாணவர்கள்.
- புதிதாக எச்.ஆர் வேலை தேடும் பட்டதாரிகள்.
வேலை வாய்ப்பு எப்படி?
இந்தப் பயிற்சியை முடிப்பவர்களுக்கு, ஐஐடி மெட்ராஸ் பிரவர்தக் மற்றும் ஸ்வயம் பிளஸ் இணைந்து மதிப்புமிக்கச் சான்றிதழை வழங்கும். ஐஐடி முத்திரை குத்தப்பட்ட சான்றிதழ் என்பதால், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை கிடைப்பது எளிது. மேலும், இந்தப் படிப்பை முடிக்கும் சிறந்த மாணவர்களுக்குத் தகுந்த வேலைவாய்ப்பு (Placement Assistance) ஏற்படுத்தித் தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
“இன்றைய கார்ப்பரேட் உலகில், ‘டேட்டா’ தான் கடவுள். எந்த ஊழியர் எப்போது வேலையை விடுவார்? யாருக்குப் பதவி உயர்வு கொடுக்கலாம்? என்பதை எல்லாம் கணிக்க (Predictive Modeling) இன்று நிறுவனங்கள் மென்பொருட்களைத் தான் நம்பியுள்ளன. எனவே, எச்.ஆர் படிக்கும் மாணவர்கள் வெறும் மேனேஜ்மென்ட் மட்டும் படிக்காமல், இதுபோன்ற டெக்னிக்கல் கோர்ஸ்களையும் முடித்து வைப்பது, கேரியரில் உதவும்!”
எப்படிச் சேருவது?
ஆர்வமுள்ளவர்கள் ‘Swayam Plus’ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடைபெறும் என்பதால், வீட்டில் இருந்தபடியே ஐஐடி பேராசிரியர்களிடம் பாடம் கற்கலாம்.
