கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்.. அரசு அமைதியாக இருப்பதா என நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த பி.ஹெச்.தினேஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் ‘தவெக தலைவர் விஜய் கரூரில் கலந்து கொண்ட பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் குழந்தைகள் என 41 பேர் வரை பலியாகி உள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள்செய்துள்ள கரூர் போலீசார் முதல் தகவல் அறிக்கையில் விஜய்யின் பெயரை சேர்க்கவில்லை.
அவர் கூட்டம் நடந்த இடத்திற்கு 7 மணி நேரம் தாமதமாக வந்ததே இந்த சம்பவத்திற்கு காரணம். எனவே இது குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும் இனிவரும் காலங்களில் தமிழகத்தில் மட்டும் இன்றி நாட்டில் எங்கும் நிகழக் கூடாது. எனவே அனைத்து அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற தவறும் பட்சத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கட்சி தலைவர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு இன்றூ (அக்டோபர் 3) சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தவெக கூட்ட நெரிசல் குறித்த வீடியோக்களை பார்க்கும்போது கடும் வேதனை தருகிறது. இதுவரை இரண்டு பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். வேறு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்தும் நடைபெற போலீசார் அனுமதித்துள்ளீர்களா? காவல்துறை கண்மூடி கொண்டிருக்கிறதா.. முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் என அனைவரும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
நடிகர் விஜய் பயணித்த பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதாக வீடியோக்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டதா இதில் வழக்குப்பதிவு செய்ய என்ன தடை? புகார் இல்லை என்றாலும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் தானே என்றும் நீதிபதி செந்தில்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
மூன்று முதல் பத்து மணி வரை பிரச்சாரத்திற்கான அனுமதி வாங்கிவிட்டு 12 மணிக்கு மக்களை கூடச் சொல்லி அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தனர் என அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் தன் வாதத்தை முன்வைத்தார்.
இதைத்தொடர்ந்து பிரச்சார வாகனத்தை ஓட்டிய ஓட்டுநர் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். மேலும் பரப்புரையில் பயன்படுத்தப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டாமா என்ற கேள்வியும் நீதிபதி எழுப்பி உள்ளார்.
மேலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கருணை காட்டப்படுகிறதா.. நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். அரசு அமைதியாக இருக்க கூடாது. இது மனிதனால் ஏற்பட்ட பேரழிவு. சேதங்களை கணக்கிட ஏன் இவ்வளவு தாமதம் என சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார்.