இன்றைய டிஜிட்டல் உலகில், காலை எழுந்ததும் வாட்ஸ்அப்பை பார்க்கிறார்களோ இல்லையோ, பல ஐடி ஊழியர்களும், மாணவர்களும் முதலில் பார்ப்பது ChatGPT அல்லது Gemini-யை தான். அந்த அளவிற்குச் செயற்கை நுண்ணறிவு (AI) நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது.
ஆனால், நேற்று (டிசம்பர் 3, புதன்கிழமை) நடந்த ஒரு சம்பவம், இந்தத் தொழில்நுட்பச் சார்பு (Tech Dependency) எவ்வளவு ஆபத்தானது என்பதை நமக்கு உணர்த்தியுள்ளது. உலகின் இரண்டு முக்கிய AI ஜாம்பவான்களான ChatGPT மற்றும் Gemini ஆகிய இரண்டுமே ஒரே நேரத்தில் முடங்கியதால், உலகம் முழுவதும் உள்ள தொழில்நுட்பப் பயனர்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகினர்.
நேற்று நடந்தது என்ன?
நேற்று காலை முதலே OpenAI நிறுவனத்தின் ChatGPT மற்றும் கூகுளின் Gemini ஆகிய இரண்டு தளங்களும் திடீரெனத் தொழில்நுட்பக் கோளாறுகளைச் சந்தித்தன. அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பா எனப் பல நாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான பயனர்கள் ஒரே நேரத்தில், “எங்களால் வேலை செய்ய முடியவில்லை” என்று சமூக வலைதளங்களில் புகார்களைக் குவித்தனர்.
பயனர்கள் பட்டபாடு:
வழக்கமாக ஏதாவது சந்தேகம் என்றால் உடனே AI-யிடம் கேட்பவர்கள், நேற்று திகைத்து நின்றனர்.
- லாகின் சிக்கல்: பலரால் தங்கள் கணக்கிற்குள் நுழையவே முடியவில்லை. திரை சும்மா சுற்றிக்கொண்டே இருந்தது.
- ஹேக்கிங் பீதி: பல பயனர்களுக்குத் திரையில் “Unusual activity has been detected from your device” (உங்கள் சாதனத்தில் இருந்து வழக்கத்திற்கு மாறான செயல்பாடு கண்டறியப்பட்டுள்ளது) என்ற சிவப்பு நிற எச்சரிக்கைச் செய்தி வந்தது. இதைப் பார்த்ததும், “ஐயோ… நம்ம அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுவிட்டதோ?” என்று பலரும் பதறிப்போயினர். பழைய சாட் ஹிஸ்டரி (History) எதுவும் வராதது இந்தப் பயத்தை இன்னும் அதிகரித்தது.
- வேலை பாதிப்பு: கோட் (Code) எழுதுவது முதல், ஈமெயில் டிராஃப்ட் செய்வது வரை அனைத்திற்கும் AI-யை நம்பியிருந்த கார்ப்பரேட் ஊழியர்களின் வேலை நேற்று சில மணி நேரம் அப்படியே ஸ்தம்பித்தது.
காரணம் என்ன?
இந்தத் திடீர் முடக்கத்திற்கு என்ன காரணம் என்று தொழில்நுட்ப உலகம் விவாதித்துக்கொண்டிருந்த நிலையில், OpenAI நிறுவனம் இதற்கு விளக்கம் அளித்தது. “எங்கள் ரூட்டிங் (Routing) அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்தத் தடை ஏற்பட்டது. இது ஒரு தொழில்நுட்பப் பிழை தான், சைபர் தாக்குதல் இல்லை,” என்று அவர்கள் தெளிவுபடுத்தினர். சில மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, நேற்று மாலைக்குள் சேவைகள் படிப்படியாகச் சீரமைக்கப்பட்டன.
கற்றுக் கொண்ட பாடம்:
இன்று (வியாழக்கிழமை) சேவைகள் மீண்டும் பழைய வேகத்தில் இயங்கத் தொடங்கிவிட்டன. ஆனால், இந்தச் சம்பவம் ஒரு முக்கியமான கேள்வியை முன்வைக்கிறது. “இயந்திரங்களை நாம் அளவுக்கு அதிகமாகச் சார்ந்து இருக்கிறோமோ?” என்பதுதான் அது. ஒருவேளை நிரந்தரமாக இந்தச் சேவைகள் முடங்கினால், நம் சொந்த மூளையை வைத்து வேலை செய்ய நாம் தயாராக இருக்கிறோமா? நேற்றைய முடக்கம் ஒரு சிறிய ‘பிரேக்’ தான். ஆனால், அது தொழில்நுட்ப உலகிற்கு ஒரு பெரிய எச்சரிக்கை மணி!.
