ஜனநாயகன் பட தயாரிப்பாளர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கும் நிலையில் தணிக்கை வாரியம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
பொங்கல் வெளியீடாக நடிகர் விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் படம் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் ப்ரொடக்ஷன் அறிவித்தது.
ஆனால் சென்சார் பிரச்சினை காரணமாக படம் வெளியாகவில்லை.
இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் தனி நீதிபதி ஆஷா சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவு பிறப்பித்தார்.
இதை எதிர்த்து தலைமை நீதிபதி அமர்வில் தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்த தலைமை நீதிபதி அமர்வு வழக்கு விசாரணையை ஜனவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்த சூழலில் படத்தை வெளியிட தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வரும் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த சூழலில் மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
அதில் தங்கள் தரப்பு வாதங்களைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளது.
எனவே இந்த வழக்கு நாளை விசாரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
