ஒகேனக்கல்லில் காவிரி நீர் வரத்து 57,000 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும் பரிசல்கள் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. Cauvery Hogenakkal
தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்ப்பதால் கர்நாடகா, கேரளாவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
காவிரியின் குறுக்கே கட்டப்பட்டது கிருஷ்ணராஜ சாகர் அணை. காவிரியின் துணை ஆறான கபினி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது கபினி அணை.
கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் காவிரி ஆற்று நீர், கபினி ஆற்று நீர் இரண்டும் கர்நாடகா மாநிலம் நரசிப்புராவில் உள்ள திருமாகூடலுவில் ஒன்றாக இணைந்து அகன்ற காவிரியாக தமிழ்நாடு நோக்கி வருகிறது.
கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை வெளுத்து எடுப்பதால் இரு அணைகளுக்குமான நீர்வரத்து அதிகரித்தது. இதனால் இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 86.000 கன அடிநீர் தமிழகம் நோக்கி காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது.
தமிழ்நாட்டின் எல்லையான பிலிகுண்டுவுக்கு 57,000 கன அடிநீர் வந்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் பெருவெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. காவிரி ஆற்றில் கர்நாடகா திறந்துவிடும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிப்பதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும் பரிசல்கள் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.