திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் இன்று (மார்ச் 29) தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.
இதில் சமூக நீதிக்கான அறிவிப்பில் 9 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
அவை,
1. இடஒதுக்கீட்டை முழுமையாக எல்லா நிலைகளிலும் நடைமுறைப்படுத்திட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.
2. உயர்நீதிமன்ற நீதியரசர்கள் நியமனத்தில் சமூகநீதியை நிலைநாட்டிட இடஒதுக்கீடு முறையைக் கொண்டு வருவதற்குத் தேவையான அரசியல் சட்டத்திருத்தம் மேற்கொள்ள ஒன்றிய அரசை வலியுறுத்துவோம்.
3. ஒன்றிய அரசின் உயர்பதவிகளிலும், பொதுத்துறை நிறுவனங்கள், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ், தேசிய சட்டப்பள்ளிகள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களிலும் மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படாத அநீதியை எதிர்ப்போம்.
4. சட்டபூர்வமாகத் தரப்பட்டுள்ள இடஒதுக்கீடு எண்ணிக்கையானது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்; அது தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
5. ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் ஆகிய மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உயர்த்தப்படும்.
6. ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பெண்களுக்கான தொழில்வாய்ப்புகளைப் பெருக்குவதற்கான திட்டங்கள் விரிவுபடுத்தப்படும்.
7. தமிழ்நாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீடு நடைமுறையை மாற்றி, அதற்குப் பதிலாக மாநில அரசின் இடஒதுக்கீடு கொள்கையைப் பின்பற்றிட ஒன்றிய அரசை வலியுறுத்துவோம்.
8. தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் எடுக்கப்படவுள்ள சாதிவாரிக் கணக்கெடுப்பின் தரவுகளின் அடிப்படையில் உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கான வழிவகை செய்யப்படும்.
9. ஆண்டுக்கு ரூ.20 இலட்சத்திற்கு மேல் ஊதியம் பெறும் உயர்நிலைப் பணி வாய்ப்புகளை ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கு முதலீட்டு ஊக்க மானியம் மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்.
