தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான மத்திய அரசின் தடைக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு அவகாசம் கேட்டதால் பிப்ரவரி 16-ந் தேதி வழக்கின் விசாரணையை ஒத்திவைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி 2013-ல் வைகோ தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்
நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் வைகோ நேரில் ஆஜராகி, இந்தத் தடை ஏன் சட்ட விரோதமானது என்பதற்கான முதற்கட்ட வாதங்களை முன்வைத்தார்.
இன்றைய விசாரணையின் போது
மத்திய அரசு அவகாசம் கேட்டதால் வழக்கு பிப்ரவரி 16-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்றைய வழக்கு விசாரணை குறித்து வைகோ கூறுகையில், “விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டையும் இணைத்து தமிழீழம் அமைக்க முயல்கிறார்கள்” என்பதுதான் மத்திய அரசின் முக்கியமான குற்றச்சாட்டு. இதை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். வட்டுக்கோட்டை தீர்மானத்திலோ, தலைவர் பிரபாகரன் மாவீரர் நாள் உரைகளிலோ ஒருபோதும் தமிழ்நாட்டை இணைக்கும் நோக்கம் இருந்ததில்லை என்பதை ஆதாரங்களுடன் விளக்கினேன்.
பிரபாகரன் பின்னால் இருக்கும் தமிழீழ வரைபடத்தில் கூட தமிழ்நாட்டின் ஒரு சிறு துளி இடம் கூட இருந்ததில்லை. ஈழ மண்ணை மீட்பது மட்டுமே அவர்களின் நோக்கம். மத்திய அரசின் அடிப்படை வாதமே பொய்யானது எனும்போது, இந்தத் தடையின் மொத்த கட்டுமானமும் (The whole edifice of the ban) சரிந்து விழுகிறது.
ஆயுதப் போராட்டம் பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது, 1948 ஐநா மனித உரிமைகள் பிரகடனத்தின் முகவுரையை மேற்கோள் காட்டினேன். ஒரு நாட்டில் அடக்குமுறையும் சர்வாதிகாரமும் நிலவும் போது, அதை எதிர்த்துப் புரட்சி செய்வது (Rebellion against tyranny) நியாயமானது என ஐநா-வே அங்கீகரிக்கிறது.
மாபெரும் தலைவர் நெல்சன் மண்டேலா ரிவோனியா நீதிமன்றத்தில் சொன்னது போல—அரசாங்கம் ஆயுதங்களால் மக்களை ஒடுக்கும் போது, மக்கள் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்துவது தவிர்க்க முடியாதது. ஈழத்தில் நடந்தது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை (Genocide). அதற்கான நீதியை வென்றெடுக்கும் வரை எனது சட்டப்போராட்டம் ஓயாது என்றார்.
