அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வு புதிய திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக போராடி வந்த நிலையில், TAPS என்ற உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓய்வு பெற்ற அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் ரேணுகாதேவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன் ஓய்வு பெற்றவர்கள் ஓய்வூதிய பலன்களை பெற முடியாமல் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பங்களிப்பை வழங்கிய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் பெற உரிமை இருக்கிறது. இதை மறுப்பது நியாயமற்றது. அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் தேதியை கணக்கில் கொள்ளாமல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 73 ஆயிரம் கோடி ரூபாய் எல்ஐசி நிறுவனத்தில் இருப்பதாக நிதியமைச்சர் கூறி இருப்பதால் 2025 டிசம்பருக்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் சிக்கல் இருக்காது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கை இன்று (மார்ச் 4) விசாரித்த நீதிபதி பிடி ஆஷா, இதுதொடர்பாக மார்ச் 26 ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.
