நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 அன்று நாடாளுமன்றத்தில் தனது ஒன்பதாவது தொடர்ச்சியான மத்திய பட்ஜெட்டை (Union Budget 2026) தாக்கல் செய்தார். 2025ஆம் ஆண்டு பட்ஜெட் பீகார் மாநிலத்திற்குச் சிறப்புக் கவனம் செலுத்தியது.
இதேபோல், 2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மேற்கு வங்கம், தமிழ்நாடு, அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களை மையமாகக் கொண்ட அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
தேர்தலை மையமாக வைத்த பட்ஜெட்:
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் மாநிலங்களில் இந்த பட்ஜெட் அதிக கவனம் செலுத்தியுள்ளது. ஜவுளித்துறை, சாலை மற்றும் ரயில் உள்கட்டமைப்பு, மற்றும் அரிய வகை கனிமச் சுரங்கத் தொழில் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. நிதியமைச்சர் சீதாராமனின் உரையில், இம்மாநிலங்களை இலக்காகக் கொண்ட சுற்றுலா மற்றும் புனித யாத்திரைத் திட்டங்கள் தொடர்பான பல அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன. தேர்தல் மாநிலங்கள் பட்ஜெட்டிலிருந்து என்ன மாதிரியான அறிவிப்புகளையும் சலுகைகளையும் பெற்றன என்று இங்கே பார்ப்போம்.
மேற்கு வங்க மாநிலம்:
- சுற்றுச்சூழலுக்கு உகந்த சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக, கிழக்கில் டான்குனியிலிருந்து மேற்கில் சூரத் வரை ஒரு புதிய பிரத்யேகச் சரக்கு வழித்தடம் அமைக்கப்படும்.
- துர்காபூரில் மத்தியப் பகுதியுடன் ஒருங்கிணைந்த கிழக்குக் கடற்கரைத் தொழில்துறை வழித்தடம் உருவாக்கப்படும்.
வடகிழக்கு மாநிலங்கள்:
- வடகிழக்கு மாநிலங்களில் ஐந்து புதிய சுற்றுலாத் தலங்கள் உருவாக்கப்படும் என்றும், கூடுதலாக 4,000 மின் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடுக்கான அறிவிப்புகள்:
- மும்பை – புனே, புனே – ஹைதராபாத், ஹைதராபாத் – பெங்களூரு, ஹைதராபாத் – சென்னை, சென்னை – பெங்களூரு, டெல்லி – வாரணாசி மற்றும் வாரணாசி – சிலிகுரி உள்ளிட்ட நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்தை எளிதாக்க, ஏழு அதிவேக ரயில் வழித்தடங்கள் உருவாக்கப்படும்.
- புலிகாட் ஏரியிலும், தமிழ்நாடு மற்றும் ஆந்திராவின் எல்லைப் பகுதிகளிலும் பறவைகள் பார்க்கும் தளங்கள் (Bird watching trails) உருவாக்கப்படும்.
- தமிழ்நாட்டில் உள்ள கோயில் நகரங்கள் மற்றும் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் உள்கட்டமைப்பை வலுப்படுத்த, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.20,000 கோடி செலவிடப்படும்.
கேரளா மற்றும் அசாம்:
- ஒடிசா, கேரளா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு போன்ற கனிம வளம் மிக்க மாநிலங்களில், முக்கியமான கனிம வசதிகளை அமைப்பதற்கு மத்திய அரசு உதவி வழங்கும்.
- ஆமைகளின் முக்கியக் கூடு கட்டும் இடங்களுடன், அவற்றுக்கான பாதுகாப்புப் பாதைகளும் உருவாக்கப்படும்.
- அடுத்த ஐந்து ஆண்டுகளில் அசாம் உள்ளிட்ட மாநிலங்களின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
