கோவையில் பார்சன் குடியிருப்பில் 82 வயது மூதாட்டி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை தொடர்பாக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
கோவை நஞ்சுண்டாபுரம் ‘பார்சன்’ குடியிருப்பில் வசிப்பவர் ஆயுர்வேத மருத்துவர் ராம்குமார் குட்டி. கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், தனது குடும்பத்துடன் பல ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறார். இவருடன் இவரது தாயார் கஸ்தூரி (82) வசித்து வந்தார்.
சமீபத்தில் மருத்துவர் ராம்குமார் குட்டி தனது குடும்பத்தினருடன் வியட்நாம் நாட்டுக்குச் சுற்றுலா சென்றுள்ளார். இதனால் வீட்டில் அவரது தாயார் கஸ்தூரி மற்றும் கடந்த 4 மாதங்களாகப் பணிபுரிந்து வந்த நேபாளத்தைச் சேர்ந்த ஒரு பணிப்பெண் மட்டுமே இருந்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி
இன்று காலை ராம்குமார் குட்டியின் குடும்பத்தினர் கஸ்தூரிக்குத் தொலைபேசியில் அழைத்தபோது, அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்கள், அருகில் வசிப்பவர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அண்டை வீட்டார் நேரில் சென்று பார்த்தபோது, கஸ்தூரி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக இது குறித்துக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
முதல்கட்ட விசாரணையில் வீட்டில் இருந்த தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. மூதாட்டியின் கைபேசி வீட்டின் பின்புறம் வீசப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. வீட்டில் தங்கியிருந்த நேபாளப் பணிப்பெண் மர்மமான முறையில் தலைமறைவாகியுள்ளார்.
காவல் துணை ஆணையர் விளக்கம்
சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த துணை ஆணையர் கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கேரளாவைச் சேர்ந்த மூதாட்டி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வீட்டில் பணிபுரிந்த நேபாளப் பெண் குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகளைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படையினர் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விரைந்துள்ளனர். மூதாட்டி கட்டிப்போடப்பட்டதால் மூச்சுத்திணறி உயிரிழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே உறுதியாகத் தெரியும்,” என்றார்.
கோவையில் பாதுகாப்பு நிறைந்த Kகுடியிருப்பில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
