தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடந்த இடத்திற்கு முன், ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், சீலநாயக்கன்பட்டி அருகே தாளமுத்து நடராஜன் திடலில் இன்று (பிப்ரவரி 13) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மயங்கி விழுந்த வட மாநிலத்தைச் சேர்ந்த சூரஜ் என்ற இளைஞர் உயிரிழந்தார். கரூரைத் தொடர்ந்து சேலத்தில் நடந்த கூட்டத்திலும் உயிரிழப்பு ஏற்பட்டது, தமிழக மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த திடலுக்கு வெளியே ஒரு உடல் கிடந்துள்ளது. இதனால் கூட்டத்துக்கு வந்தவர்தான் மயங்கி உயிரிழந்திருக்கிறார் என்று முதலில் தகவல் பரவியது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர்.
உயிரிழந்த நபரிடமிருந்து கடிதம் ஒன்றையும் போலீசார் எடுத்தனர். அதில் தனது குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்துகொள்ளப்போவதாக எழுதியிருந்தது.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் மேட்டுரைச் சேர்ந்த 50 வயதான முருகன் என்பதும், மதுவில் விஷம் கலந்து குடித்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகவல் அவரது குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்ட நிலையில், சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்த அவர்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட முருகனின் உடலை பெற்றுக்கொண்டனர்.
