கலைஞர் சிலை மீது கருப்பு மை ஊற்றப்பட்ட விவகாரத்தில் 77 வயது மருத்துவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். Black ink on kalaignar karunanidhi statue
தமிழகத்தில் 5 முறை முதல்வராக பதவி வகித்த கலைஞர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2018ஆம் ஆண்டு காலமானார்.
இதைத்தொடர்ந்து 2021ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கலைஞருக்கு பல்வேறு மாவட்டங்களிலும் சிலைகள் திறக்கப்பட்டன. சேலம் மாவட்டத்தில் அண்ணா பூங்கா முன்பாக 2023ஆம் ஆண்டு 20 அடி உயரம் கொண்ட கலைஞர் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நேற்று அதிகாலை இந்த சிலை மீது யாரோ கருப்பு மை ஊற்றிச் சென்றுள்ளார்.
மார்பு மற்றும் கால் பகுதியில் கருப்பு நிற மை ஊற்றப்பட்டிருந்தது சேலம் மாவட்டத்தில் திமுகவினரை கொந்தளிக்கச் செய்தது. கலைஞரை அவமதிக்கும் வகையில் கருப்பு மையை ஊற்றி சென்றவரை விரைவில் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக கூட்டணி கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, கலைஞர் மீது விஷமிகள் கருப்பு மையை ஊற்றி சேதப்படுத்தியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். மறைந்த தலைவர்களின் சிலைகளை இதுபோன்று அவமதிப்பதை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“அரசியல் பண்பாட்டை சிதைத்து அமைதியை சீர்குலைக்க முயலும் இத்தகைய சக்திகளை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில பொதுச்செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்தசூழலில் அஸ்தம்பட்டி துணை ஆணையர் அஷ்வினி தலைமையிலான போலீசார் நேரில் சென்று கலைஞர் சிலையை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் அலசி ஆராய்ந்தனர்.
இந்தநிலையில் கலைஞர் சிலை மீது கருப்பு மை ஊற்றியது சேலத்தைச் சேர்ந்த 77 வயதான மருத்துவர் விஸ்வநாதன் என்பது தெரியவந்துள்ளது. இவர், சேலம் மாவட்டம் ஸ்வர்ணபுரி அருகே அருணகிரி ஈ.என்.டி கிளினிக்கில் வேலை செய்து வந்துள்ளார். சிசிடிவி காட்சியில் இவர் பெயிண்ட் டப்பாவுடன் அந்த பகுதிக்கு சென்று வந்தது பதிவாகியுள்ளது. அவரை கைது செய்து போலீசார் கலைஞர் சிலை மீது கருப்பு மையை ஊற்றியது குறித்து விசாரித்து வருகின்றனர். Black ink on kalaignar karunanidhi statue