மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டங்கள் தொடருகின்றன.
மேற்கு வங்கத்தில் SIR எனப்படுகிற சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தத்தின் மூலம் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் திட்டமிட்டே வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதாக அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி குற்றம்சாட்டி இருந்தார். இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்துக்கு நேரில் சென்று தாமே ஆஜராகி வாதாடியவர் மமதா பானர்ஜி.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான இந்திய தேர்தல் ஆணைய குழு நேற்று கொல்கத்தா சென்றடைந்தது.
கொல்கத்தா விமான நிலையத்தில் இறங்கியது முதல் தேர்தல் ஆணைய ஹோட்டல் வரை ஞானேஷ்குமார் குழுவுக்கு எதிராக கறுப்பு கொடி காட்டும் போராட்டம், Go Back போராட்டம் நடத்தப்பட்டன.
இந்நிலையில் இன்று காலை கொல்கத்தா காளி கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்றார் ஞானேஷ்குமார். அங்கும் அவருக்கு கறுப்பு கொடி காண்பிக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, Go Back முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மேற்கு வங்க மாநில அரசை சஸ்பெண்ட் செய்துவிட்டு மாநில சட்டப்பேரவைத் தேர்தலை 6 மாதம் ஒத்திவைக்க முயற்சிகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியான நிலையில் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரின் கொல்கத்தா பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
