பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக, பாஜகவுக்கு சென்று மீண்டும் பாமகவுக்கு திரும்பிய திருத்தணி முன்னாள் எம்.எல்.ஏ. ரவிராஜை, டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். BJP’s ‘Return’ Raviraj Appointed as PMK State Vice President!
பாமகவில் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் நீடித்து வருகிறது. ராமதாஸ், அன்புமணி இடையே சமாதானம் ஏற்படுத்தும்முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே பாமகவின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் பலரையும் ராமதாஸ் நீக்கியும் அவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகளையும் நியமித்தும் அறிவிப்பு வெளியிட்டு வருகிறார். இன்னொரு பக்கம், ராமதாஸ் நீக்கிய மாவட்ட செயலாளர், மாவட்ட தலைவர்கள் தொடர்ந்தும் பதவியில் நீடிப்பர் என அன்புமணி ராமதாஸும் அறிக்கை வெளியிட்டு வருகிறார்.
பாமகவில் இருந்து நேற்றைய தினம் வரை 35 மாவட்ட செயலாளர்கள், 16 மாவட்ட தலைவர்கள், மற்றும் பொருளாளர் ஒருவர் நீக்கப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில் இன்று ஜூன் 10-ந் தேதி திருவண்ணாமலை,திருவள்ளூர், நாமக்கல், திருச்சி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களின் மாவட்டசெயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களை ராமதாஸ் நியமித்துள்ளார்.
கடலூர் மாநகர செயலாளர்களையும் அறிவித்த ராமதாஸ், பாமகவின் மாநில துணை தலைவராக முன்னாள் எம் எல் ஏ ரவிராஜ் மற்றும் சமூக நீதி பேரவை தலைவராக இருந்த பாலு நீக்கப்பட்டு வழக்கறிஞர் கோபுவையும், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளராக பூபால கண்ணனையும் நியமித்துள்ளார்.
இன்றைய தினம் மட்டும் 11 மாவட்ட செயலாளர்கள் மற்றும் 9 மாவட்ட தலைவர்களை ராமதாஸ் அறிவித்துள்ளார். தற்போது வரை மொத்தம் 46 மாவட்ட செயலாளர்கள், 25 மாவட்ட தலைவர்களை மாற்றம் செய்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
யார் இந்த ரவிராஜ்?
2001-ம் ஆண்டு தேர்தலில் திருத்தணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ரவிராஜ். 2017-ம் ஆண்டு பாமகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினராகவும் அவர் நியமிக்கப்பட்டார். பின்னர் 2022-ம் ஆண்டு மீண்டும் பாமகவுக்கே திரும்பினார் ரவிராஜ். தற்போது பாமகவின் மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.