பாஜகவுக்கு ஆட்சியில் பங்குதர அதிமுக ஏமாளி அல்ல என எடப்பாடி பேசியது குறித்து தமிழக பாஜக மாநில நயினார் நாகேந்திரன் இன்று (ஜூலை 20) விளக்கம் அளித்துள்ளார். bjp nainar response over eps speech on alliance
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நாகப்பட்டினத்தில் பேசினார்.
அப்போது அவர், ”ஆட்சியில் பாஜகவுக்கு அதிமுக பங்கு தரும் என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். நாங்கள் பங்கு தர ஏமாளிகள் அல்ல. அதிமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும்” என எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார்.
ஆனால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என அமித் ஷா தொடர்ந்து கூறி வரும் நிலையில், அதையே அண்ணாமலை, தமிழிசை உள்ளிட்ட தமிழக பாஜக தலைவர்களும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் நாகையில் எடப்பாடியின் பேச்சுக் குறித்து இன்று திருவாரூர் வந்த தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்!
அதற்கு அவர், “கூட்டணி ஆட்சி அமைக்க நாங்கள் ஏமாளி இல்லை எனப் பேசியதில், உள் அர்த்தமோ, உள் நோக்கமோ கிடையாது என எடப்பாடி பழனிசாமி என்னிடம் போனில் சொன்னார். ‘பாஜகவிடம் அதிமுகவை அடகு வைத்துவிடுவீர்கள், அதிமுகவை பாஜக கபளீகரம் செய்துவிடும்’ என்ற திமுகவின் விமர்சனத்திற்கு இபிஎஸ் பதிலளித்துள்ளார்.
திமுக ஆட்சியை விரட்ட வேண்டும், திமுக ஆட்சி இருக்கக் கூடாது. இதுதான் எங்களுடைய நோக்கம். அமித் ஷாவும் எடப்பாடி பழனிசாமியும் என்ன சொல்கிறார்களோ அதன்படி நாங்கள் கேட்டுக்கொள்வோம். அவர்கள் பேசி முடிவெடுக்கட்டும். கூட்டணியில் எந்தவிதமான குழப்பமும் இல்லை. வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. 2026 தேர்தலில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்” என அவர் தெரிவித்தார்.