திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு “கர்தவ்ய த்வார்” என இந்தியில் பெயர் எழுதப்பட்டுள்ளதற்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்தி பேசாத மாநிலங்களில் திட்டமிட்டு இந்தி திணிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் பாஜக அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கைகளுக்கு திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் “கர்தவ்ய த்வார்” என்ற இந்திப் பெயர் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி தனது எக்ஸ் பதிவில், “புதியதாகக் கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு ‘கர்தவ்ய த்வார்’ என இந்தியில் பெயர் வைத்துள்ளது தெற்கு ரயில்வே.‘கர்தவ்ய த்வார்’ என்றால் தமிழில் ‘கடமையின் நுழைவுவாயில்’ என்று பொருள். பாஜக அரசின் தற்போதைய ஒரே கடமை ‘இந்தித் திணிப்பு’ மட்டுமே.தெற்கு ரயில்வே உடனடியாக இந்திப் பெயரை நீக்கி, தமிழில் பெயர் சூட்ட வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
