இந்திய தேர்தல் ஆணையம், 2025 ஆம் ஆண்டுக்கான சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டத்தை (IEVP) டெல்லியில் உள்ள இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனத்தில் (IIIDEM) தொடங்கியது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர் டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர் பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடினார். பிரான்ஸ், தென்னாப்பிரிக்கா, பெல்ஜியம், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் கொலாம்பியா ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த 14 பங்கேற்பாளர்கள் தொடக்க அமர்வில் கலந்து கொண்டனர்.
பங்கேற்பாளர்களுக்கு வாக்களிக்கும் இயந்திரங்களின் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் வாக்காளர் பட்டியலைத் தயாரித்தல் மற்றும் தேர்தல்களை நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகளால் விளக்கமளிக்கப்பட்டது.
2025 நவம்பர் 5 முதல் 6 வரை பீகாரில் இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை உள்ளடக்கிய சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டத்தின் கீழ், பங்கேற்பாளர்கள் நவம்பர் 6, 2025 அன்று வாக்களிக்கும் இயந்திரங்கள் அனுப்பப்படும் மையங்களைப் பார்வையிட்டு, வாக்குப்பதிவையும் பார்வையிடுவார்கள்.
சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டம் என்பது பிற நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தேர்தல் மேலாண்மை அமைப்புகளுடன் (EMBs) சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் செயல்பாட்டிற்கானதேர்தல் ஆணையத்தின் முதன்மைத் திட்டமாகும். 2014 முதல், இந்தத் திட்டம் இந்தியாவின் தேர்தல் முறையின் ஆற்றல்களை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தி வருவதுடன், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் தேர்தல்களை நடத்துவதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த நடைமுறைகளையும் பகிர்ந்து கொள்கிறது.
