இன்றைய இளைஞர்கள் தங்கள் படிப்பை முடித்த பிறகு ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை செய்ய விரும்புகிறார்கள். இருப்பினும், அதிகரித்து வரும் போட்டியால் நல்ல வேலையை கண்டுபிடிப்பது இப்போது எளிதான காரியமல்ல. ஒருவேளை வேலை கிடைத்தாலும், சம்பளம் குறைவாகவே இருக்கிறது. இதன் விளைவாக பெரும்பாலான இளைஞர்கள் பகுதி நேர வேலை (Part Time Job) செய்ய விரும்புகிறார்கள். பல இணையதளங்கள் வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன. ஆனால் ஒவ்வொரு வேலை அறிவிப்பும் அல்லது வாய்ப்பும் உண்மையானது அல்ல. அதில் நீங்கள் கவனமாக இல்லாவிட்டால் மோசடிக்காரர்களிடம் (Online Frauds) நீங்கள் பலியாக நேரிடும்.
பகுதி நேர வேலையில் மோசடி: சைபர் குற்றவாளிகள் போலியான பயிற்சிப் பணிகள் மற்றும் வேலைகளை வழங்குவதன் மூலம் மாணவர்களை ஒரு வலையில் சிக்க வைக்கின்றனர். நேர்காணல் இல்லாமல் தேர்வு, உடனடிப் பணி நியமனம் மற்றும் நல்ல சம்பளம் ஆகியவற்றை வாக்குறுதியளித்து, அவர்கள் உங்களுடைய தனிப்பட்ட தகவல்களைப் பெறுவார்கள். அதன் பின்னர், அவர்கள் பணம் கேட்பார்கள். நீங்கள் கொடுக்க மறுத்தால் உங்கள் தனிப்பட்ட விவரங்களைத் தவறாகப் பயன்படுத்துவோம் என்று மிரட்டி உங்களிடம் பணம் பறிக்கப் பார்ப்பார்கள்.
மோசடி எப்படி நடக்கிறது? பகுதி நேர வேலை அல்லது இன்டர்ன்ஷிப் மோசடிகளில், மோசடிக்காரர்கள் முதலில் மாணவர்களையும் இளைஞர்களையும் அடையாளம் காண்பார்கள். அனைத்து மோசடி வேலைகளும் சமூக ஊடகங்கள் மூலமாகவே செய்யப்படுகின்றன. சமூக ஊடகங்களில் வேலை அல்லது இன்டர்ன்ஷிப் பதிவை விரும்பிய அல்லது அதற்காக விண்ணப்பித்தவர்களை மோசடிக்காரர்கள் குறிவைப்பார்கள். பின்னர், அவர்கள் போலியான வேலைவாய்ப்புகளைக் காட்டி உங்களை மயக்கி, உங்கள் தனிப்பட்ட விவரங்களைக் கேட்பார்கள்.
ஆரம்பத்தில் எல்லாம் தொழில்முறையாகத் தோன்றினாலும், உண்மையில் அங்கே உண்மையான நிறுவனமோ அல்லது வேலையோ இருக்காது. செயல்முறையின் பாதியை முடித்த பிறகு, வேலையைப் பெறுவதற்காக ஒரு தொகையைச் செலுத்துமாறு அவர்கள் உங்களிடம் கேட்பார்கள். நீங்கள் சிந்திப்பதற்கு நேரம் கொடுக்காமல் இருக்க, அந்த வாய்ப்பை வேறு ஒருவருக்குக் கொடுத்துவிடுவோம் என்றும், விரைவாகச் செயல்படுமாறும் அவர்கள் உங்களிடம் கூறுவார்கள். பெரும்பாலான மக்கள், அந்த வாய்ப்பை இழக்க விரும்பாமல் பணத்தைச் செலுத்தி மோசடியில் சிக்கிக்கொள்கிறார்கள்.
யார் எளிதில் மாட்டுகிறார்கள் தெரியுமா? மோசடிக்காரர்கள் பொதுவாக மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் ஒரு குறிப்பிட்ட பின்னணி அல்லது வருமான மட்டத்தில் உள்ளவர்களைக் குறிவைக்கின்றனர். இவர்கள் தங்களின் தற்போதைய வேலைகள் அல்லது குறைந்த சம்பளத்தால் விரக்தியடைந்தவர்கள் ஆவர். மேலும் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்காக பகுதி நேர வேலைகளைச் செய்ய விரும்புபவர்களாக இருப்பார்கள். புதிதாகப் பட்டம் பெற்றவர்களும் மோசடிக்காரர்களுக்கு எளிதில் குறிவைக்கப்படுகிறார்கள். ஏனெனில் அவர்கள் விரைவாகப் பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசைக்கு எளிதில் பலியாகிவிடுகிறார்கள்.
அனைத்து வேலைவாய்ப்பு அறிவிப்புகளும் போலியானவையா? அப்படி நாம் உறுதிப்படுத்த முடியாது. இருப்பினும், கடந்த காலப் பதிவுகளின் அடிப்படையில், பெரும்பாலானவை மோசடிகளாகவே இருக்கின்றன. உண்மையான நிறுவனங்கள் பொதுவாகத் தங்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது லிங்க்ட்இன் மற்றும் இன்டீட் போன்ற தளங்களில்தான் வேலைவாய்ப்பு விளம்பரங்களை வெளியிடுகின்றன. மோசடிக்காரர்கள் மக்களை ஏமாற்றுவதற்காக ஃபேஸ்புக், வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். எனவே இதில் நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
