2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் உழைத்தது போல, 2026 தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக பணியாற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் இன்று (செப்டம்பர் 23) சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, திமுக மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு சில ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்.
உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின், போன்ற முகாம்களில் கலந்து கொண்டு, மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று கூறிய ஸ்டாலின், ‘
குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விடுபட்ட மகளிரை சேர்த்திடும் வகையில் மேற்காணும் முகாம்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தகுதியுள்ள மகளிர் அனைவருக்கும் உரிமைத் தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
2024-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 40-க்கு 40 தொகுதிகளை வென்று வரலாற்று சாதனை படைத்தது. அதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அரும்பாடுபட்டது போல, தற்போது 2026 தேர்தலுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக பணியாற்ற வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை தொடர்ச்சியாக சந்தித்து, அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்து அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
அமைச்சர்கள், மண்டல பொறுப்பாளர்கள், மாவட்டக் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும்.
நாடாளுமன்றம் நடைபெறும் நாட்களை தவிர்த்து, குறைந்தது வாரத்தில் 4 நாட்கள் தங்கள் தொகுதியில் தங்கி மக்களை சந்தித்து, அவர்களுக்கான தேவையான பணிகளை செய்திட வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், தங்கள் தொகுதியில் ஆற்றிய மக்கள் பணிகள், பாராளுமன்றத்தில் தமிழ்நாட்டு மக்களின் நலனை காத்திடும் வகையில் எடுத்துரைத்த கருத்துகள் ஆகியவை பற்றிய அறிக்கையை 15 நாட்களுக்கு ஒருமுறை தனக்கு அளித்திட வேண்டும் என்று கூறியுள்ளார்.