தமிழக – புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு விருப்ப மனு விநியோகிக்கப்படும் தேதியை அக்கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இதையொட்டி அதிமுக, பாமக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் விருப்ப மனுக்களை விநியோகித்த நிலையில், ஆளும் கட்சியான திமுக இதுவரை இதுகுறித்த அறிவிப்பை வெளியிடாமல் இருந்தது.

இந்தநிலையில், பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (பிப்ரவரி 19) வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்,
“தமிழ்நாடு -புதுச்சேரி மாநில சட்டப் பேரவை பொதுத்தேர்தலுக்கு திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் மார்ச் 2 ஆம் தேதி திங்கள்கிழமை வரை திமுக அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
சட்டப்பேரவை தொகுதிக்கான விண்ணப்பக் கட்டணம் பொதுத் தொகுதிக்கு ரூ. 25,000-ஆகவும், மகளிர் மற்றும் தனித் தொகுதிக்கு ரூ. 15,000-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விண்ணப்பித்தவர்கள் கூட்டணியின் தோழமைக் கட்சிகளுக்கென பகிர்ந்து கொள்ளப்பட்ட தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்திருப்பின் அவர்களது விண்ணப்பக் கட்டணம் பின்னர் திருப்பித் தரப்படும். விண்ணப்ப படிவத்தை திமுக தலைமை அலுவலகத்தில் ரூ. 1,000 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
