தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை இன்று மாலை 4 மணிக்கு (மார்ச் 15) இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது.
234 எம்.எல்.ஏக்களைக் கொண்ட தமிழக சட்டப்பேரவையின் பதவி காலம் மே 10-ந் தேதி முடிவடைகிறது. புதுச்சேரியின் சட்டசபை பதவிக் காலம் ஜூன் மாதம் முடிவடைகிறது.
இதேபோல கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவைகளின் பதவி காலமும் முடிவடைகிறது.
இதனையடுத்து தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. சிறப்பு வாக்காளர் திருத்தம் மூலம் இறந்த வாக்காளர்கள், இரட்டை வாக்காளர்கள், இடம் பெயர்ந்த வாக்காளர்கள் நீக்கப்பட்டு புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதன் பின்னர் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான இந்திய தேர்தல் ஆணையத்தின் குழு தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கும் நேரில் சென்று சட்டசபை தேர்தல்களுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தது. இந்த மாநிலங்களின் அரசியல் கட்சிகள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை தலைவர்களுடன் தேர்தல் ஆணையத்தின் குழு ஆலோசனை மேற்கொண்டது.
இதனைத் தொடர்ந்து தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதியை இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்.
டெல்லியில் இன்று மாலை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் தேர்தல் தேதிகளை அறிவிக்கிறார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஒரே கட்டமாகவும் மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாமில் பல கட்டங்களாகவும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது.
