பெரியார் குறித்து அவதூறாக பேசி வரும் வரலாறு தெரியாத அரைவேக்காடுகளின் வாய்ச்சவடாலில் ஏமாற வேண்டாம்” என்று சீமானை அருணன் விமர்சித்துள்ளார்.
சமீப காலமாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது அடுத்தடுத்த செய்தியாளர் சந்திப்புகளில் தொடர்ந்து பெரியாரை காட்டமாக விமர்சித்து வருகிறார். அவரது பேச்சுக்கு எதிராக பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவர் மீது தமிழகம் முழுவதும் 70க்கு மேற்பட்ட காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மீண்டும் சர்ச்சை பேச்சு!
இந்த நிலையில் நேற்று (ஜனவரி 26) புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் மீண்டும் பெரியாரை விமர்சித்தார். அவர் கூறுகையில், “எதற்கெடுத்தாலும் பெரியார் மண்.. பெரியார் மண் என்று சொல்கிறார்கள்.. ஆனால், பெரியாரே ஒரு மண்தான்.
பெரியார் தான் சோறு ஊட்டிவிட்டார், பெரியார் தான் சீர்திருத்தம், பெரியார் தான் எல்லாமே என்று சொல்கிறார்கள். அப்போ முன்னோர்கள் எல்லாம் சும்மா இருந்தார்களா?
இது பெரியார் மண் என்று பேசாதீர்கள், இது சேர, சோழ, பாண்டியன் மண், முத்துராமலிங்க தேவரின் மண், தீரன் சின்னமலையின் மண், இது என் மண், தமிழ் மண், எங்களுக்குஇது பெரியார் மண் அல்ல. பெரியாரே ஒரு மண்ணுதான்” என மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் சீமான் பேசியிருந்தார்.
வரலாறு தெரியாத அரைவேக்காடுகள்
இந்தநிலையில் பேராசிரியர் அருணன் தனது எக்ஸ் பக்கத்தில் சீமானுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அவரது பதிவில், “இது பெரியார் மண் அல்ல, மூவேந்தர் மண் என்கிறார் ஒருவர். பல்லவர்-சோழர் காலத்தில்தான் பிராமணிய-சமஸ்கிருத ஆதிக்கம் வந்தது. தமிழருக்கும் தமிழுக்கும் பெரும் கேடு சூழ்ந்தது. அதை எதிர்த்து வலுவான களம் அமைத்தவர் பெரியாரே.
வரலாறு தெரியாத அரைவேக்காடுகளின் வாய்ச்சவடாலில் ஏமாற வேண்டாம்” என்று அருணன் தெரிவித்துள்ளார்.