பிரான்ஸ் அரசின் உயரிய ‘செவாலியே’ விருது (Chevalier de l’Ordre des Arts et des Lettres) திரைப்பட கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு வழங்கப்படுகிறது.
கலை, இலக்கியம், அறிவியல் துறைகளில் சிறந்து விளங்குவோருக்காக பிரான்ஸ் அரசின் ‘செவாலியே’ விருது வழங்கப்படுகிறது. சத்யஜித் ரே, சிவாஜி கணேசன், ஷாருக்கான், கமல்ஹாசன் ஆகியோர் இந்த செவாலியே விருது பெற்றுள்ளனர்.
தற்போது, திரைப்பட கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு, ‘செவாலியே’ விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வரும் 13-ந் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த விருது, தோட்டா தரணிக்கு வழங்கப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் கடந்த செப்டம்பர் மாதம் லண்டன் பயணம் மேற்கொண்ட போது ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் படத்தை திறந்து வைத்தார். இப்படத்தை தமது கை வண்ணத்தில் உருவாக்கியவர் தோட்டா தரணி
செவாலியே விருது பெறும் தோட்டா தரணிக்கு தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.
