ஒரு வாரத்திற்குள் செவிலியர்களுக்கு பணி நியமனை ஆணை வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த செவிலியர்கள் 4 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பனி, வெயில் பார்க்காமல் இரவு பகலாக போராடுவதால் செவிலியர்கள் பலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 22) சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “ இதுவரை திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 3,614 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். நிரந்தரப் பணியாளர்களைப் போலவே தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கும் கோப்பு அரசின் பரிசீலனையில் உள்ளது, விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்.
செவிலியர்களுக்கு ஏற்கனவே 14,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. விடுபட்ட சிலருக்கு அந்த நிலுவைத் தொகையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 7400 ஒப்பந்த செவிலியர்கள் உள்ளனர்.
கொரோனா காலத்தில் பணியாற்றிய, இட ஒதுக்கீடு (Communal Rotation) அடிப்படையில் வராத 724 செவிலியர்களுக்கும் தொகுப்பூதிய அடிப்படையில் பணி வழங்க முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். ஒரு வார காலத்திற்குள் அவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும்.
ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்களின் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும் .
புதிய செவிலியர் கல்லூரிகளை உருவாக்குவது, கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களை பணியில் அமர்த்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு செவிலியர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன” என்றார்.
