சிறுவன் கடத்தல் வழக்கில் எம்.எல்.ஏ ஜெகன் மூர்த்திக்கு உச்ச நீதிமன்றம் இன்று (ஜூன் 30) முன் ஜாமீன் வழங்கியுள்ளது. Anticipatory bail for Poovai Jaganmoorthy
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ், தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ காதல் திருமண விவகாரத்தில் தனுஷின் சகோதரர் கடத்தப்பட்டார். இந்த வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமிடம் விசாரணை நடத்தப்பட்டது.
பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த காவல்துறை, ஜெகன்மூர்த்தியை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.
பூவை ஜெகன்மூர்த்தி சார்பில் தனக்கும் இந்த கடத்தலுக்கும் தொடர்பில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பூவை ஜெகன்மூர்த்தியின் முன் ஜாமீன் மனுவை நீதிபதி ஜெயச்சந்திரன் தள்ளுபடி செய்தார்.
இதை எதிர்த்து பூவை ஜெகன்மூர்த்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 30) விசாரணைக்கு வந்தபோது, இந்த கடத்தலுக்கும் ஜெகன்மூர்த்திக்கும் சம்பந்தமில்லை. இந்த வழக்கில் ஜெகன்மூர்த்தியிடம் காவல்துறை விசாரணை நடத்தியுள்ளது. அவர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவார் என்று அவரது தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சிதார்த் லூத்ரா வாதிட்டார்.
இதை கேட்ட நீதிபதி மனோஜ் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இந்த வழக்கில் பதிலளிக்க தமிழ்நாடு காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டது.
மேலும், பூவை ஜெகன் மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கியும், ரூ.25,000 பிணைத்தொகை கட்டி வழக்கமான முன் ஜாமீனை பெறவேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.Anticipatory bail for Poovai Jaganmoorthy